மனுதர்மத்தை எழுதும்போது கூடவே உட்கார்ந்து எழுதினவரு குஷ்பு... சீமான் செம்ம நக்கல்!
சென்னை: குஷ்புவையும் சேர்த்து மனுதர்மம் இழிவாக பேசுகிறது என்றுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியிருக்கிறார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: 7.5 சதவீத விழுக்காடு மசோதாவை கிடப்பில் போட வேண்டும் என்பதற்காக ஆளுநர் தாமதிக்கிறார். அதற்குள் தேர்தல் வந்து விடும். இந்த பிரச்சனையில் நிர்பந்தம் கொடுக்கப்பட்டால் தமிழக அரசு அதை ஏற்க கூடாது
[நேரலை] 27-10-2020 வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர் வீரவணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி - தலைமையகம் | சென்னை https://t.co/nRtUYUdUvU
— சீமான் (@SeemanOfficial) October 27, 2020
திருமாவளவன் பேச்சு சரி
மனுஸ்மிருதியில் எழுதிய வாசகங்களை படிக்கிறார் திருமாவளவன். என் அம்மாவை, என் தங்கையை என் குலப் பெண்களை இழிவுபடுத்தும் எதுவுமே எங்களுக்கு வேதமாகவும் புனிதமாகவும் இருக்க முடியாது. அதைத்தான் திருமாவளவன் பேசினார்.
மாட்டு கோமியம்- இறைச்சி
பா.ஜ.கவிற்கு என்ன கோட்பாடு உள்ளது. இந்தியாவிலேயே நெய் எரிக்கப்படுகிறது; பால் கொட்டப்படுகிறது; சிறுநீர் குடிக்கப்படுகிறது என்கின்றனர். இதுதான் பா.ஜ.க. கோட்பாடு. மாட்டுக்கறி சாப்பிடும் நான் தீண்டத்தகாதவன், இழிசாதி, இழிமகன், தாழ்த்தப்பட்டவன். மாட்டு கோமியம் குடிக்கிற நீ உயர்ந்தவனா? மாட்டு கோமியம் குடிக்கிற உன்னைவிட மாட்டு கறி சாப்பிடும் நான் எவ்வளவோ மேல்.
நாங்கள் மனுதர்மத்துக்கு எதிராக பேசுவோம்
பெண்களுக்கு எதிராக திருமாவளவன் ஒருபோதும் பேச மாட்டார்...ஆதரவாக தான் பேசுவார். நானும் பலமுறை இப்படி பேசி இருக்கிறேன். இந்த போராட்டங்களுக்காக திருமாவளவன் மனுதர்மத்துக்கு எதிராக பேசுவதை நிறுத்தமாட்டார். அப்படியே அவர் பேசாவிட்டாலும் நாங்கள் பேசுவோம்.
குஷ்புவுக்கு பதிலடி
மனுதர்மத்தை எழுதும்போது கூடவே உட்கார்ந்து எழுதினவரு நடிகை குஷ்பு.. குஷ்புவையும் சேர்த்து மனுதர்மம் இழிவாக சொல்கிறது என்றுதான் திருமாவளவன் பேசுகிறார். போனவாரம் காங்கிரசில் இருந்தபோது இதே குஷ்பு திருமாவளவன் பேச்சை எதிர்த்திருப்பாரா? இப்ப பாஜகவுக்கு போய்விட்டதால் பேசுகிறீர்கள்.
பாஜகவும் நடிகர்களும்
மனு தர்மத்தில் எந்த இடத்திலும் பெண்களை உயர்வாக பேசவில்லை. பொதுமேடையில் தர்க்கம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். சமூக குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.கவில் இணையும் போது கைது செய்யப்படுகின்றனர். பாஜகவில் நடிகர்கள் இணைகிறார்களா அல்லது வாங்கப்படுகிறார்களா? என்ற கேள்வி உள்ளது. இவ்வாறு சீமான் கூறினார்.