“மெட்ராஸ்” படம்போல் சுவர் சண்டை.. சாதிவெறி பேச்சு! பாமக எம்எல்ஏ மீது புகார் - கொந்தளித்த திருமாவளவன்
சென்னை: சாதிப்பெயரை இழிவுபடுத்தியதாக மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் வசந்த், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் மனு ஒன்றை அளித்து இருக்கிறார்.
அதில், "மேட்டூர் அருகே கொளத்தூர் கிழக்கு காவேரிபுரம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.

சுவர் பிரச்சனை
அந்த சுவற்றில் திருமாவளவனின் பெயரை எழுதக்கூடாது என்று பாமகவை சேர்ந்த ராஜா என்பவர் உள்ளிட்ட 3 பேர் தகராறு செய்தனர். அவர்கள் மீது விசிகவை சேர்ந்த இளையராஜா என்பவர் அளித்த புகாரின்பேரில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சதாசிவம் பேச்சு
இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி கொளத்தூர் அருகே கருங்கல்லூரில் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சாதி பிரிவினையை தூண்டும் விதமாக தமிழ்நாட்டில் நாம் நினைத்தால் ஒரு பேருந்து கூட ஓடாது. நாம் 10,000 பேர் உள்ளோம். அவர்கள் 200 குடும்பம் மட்டுமே." என்று சாதிவெறியுடன் கலவரத்தை உருவாக்க திட்டமிடுவது அம்பலமாகியுள்ளது.

வழக்குப்பதிவு
எனவே மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து சதாசிவம் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. இந்த நிலையில் பாமக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவன் ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "சேலம் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெளிப்படையாக சாதிப் பெயரைச் சொல்லி ஒரு சமூகத்தை இழிவுப்படுத்திப் பேசியதுடன் 'அவர்களை அடித்து விரட்டுவோம்' என சாதிவெறியைத் தூண்டும்படி பேசியிருக்கிறார். அவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications