திருமாவளவன் எங்கள் அய்யாவின் பெறாத பிள்ளையை போன்றவர்.. ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள்
சென்னை: திருமாவளவனுக்கு எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. திருமாவளவன் எங்கள் அய்யா (ராமதாஸ்) பெறாத பிள்ளை போன்றவர் என்று பாமக எம்.எல்.ஏ அருள் கூறியுள்ளார். அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் மேலும் எதிரியைத்தான் நண்பனாக மாற்ற வேண்டும். எங்கள் அண்ணன் திருமாவளவனை எப்படி எதிரி என்று சொல்வீர்கள். அவர் எங்கள் அண்ணன். அவரும் ராமதாஸின் மகன் போன்றவர் என்றும் அவர் கூறினார்.
தைலாபுரத்தில் பாமக அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. ராமதாஸ் தரப்பு நடத்திய இந்த அவசர கூட்டத்தில் பாமக எம்.எல்.ஏ. அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பாமகவில் தந்தை - மகன் இடையே மோதல் உச்சத்தை தொட்டுள்ளது.

ராமதாஸும் அன்புமணியும் பாமக தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகிறார்கள். தேர்தல் ஆணையம் தங்களுக்கு சாதகமாகவே உத்தரவு அளித்திருப்பதாக அன்புமணி தரப்பு கூறி வரும் நிலையில், இதனை மறுத்து வரும் ராமதாஸ் தரப்பு இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாமகவில் நடைபெற்று வரும் இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். ராமதாஸின் நிலைப்பாடு இன்னும் தெரியவில்லை. வரும் 23 ஆம் தேதி பிரதமர் மோடி மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்க இருக்கிறார்கள். அதற்குள் கூட்டணியை இறுதி செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.
இந்த சூழலில்தான், தைலாபுரத்தில் பாமக அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு விடுத்தார். இதில் பங்கேற்கும் முன்பாக பாமக எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, தேர்தல் கூட்டணி குறித்தும் வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசனை செய்வதற்காக அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் வேறும் எதுவும் பெரிதாக இல்லை.
மோடி கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது குறித்து ராமதாஸிடம்தான் கேட்க வேண்டும். ராமதாஸ் யாருடன் கூட்டணி சேருகிறாரோ அவர்தான் முதல்வர். அந்த மாதிரியான கூட்டணியை ராமதாஸ் அமைப்பார் என்றார். பின்னர் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக எம்.எல்.ஏ. அருள், விசிக தலைவர் திருமாவளவனை பாராட்டும் விதமாக பேசினார். இது தொடர்பாக அருள் கூறியதாவது:-
திருமாவளவனுக்கு எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. திருமாவளவன் எங்கள் அய்யா (ராமதாஸ்) பெறாத பிள்ளை போன்றவர். அருந்ததியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் ராமதாஸ். வன்னியர்களும் தலித் சமுதாய மக்களும் இரண்டு தண்டவாளமாக பார்த்துக் கொண்டு இருப்பவர் ராமதாஸ். அப்படி இருக்கும் போது எங்களுக்கு யார் எதிரி? யாருமே எதிரில்லை.
எதிரியைத்தான் நண்பனாக மாற்ற வேண்டும். எங்கள் அண்ணன் திருமாவளவனை எப்படி எதிரி என்று சொல்வீர்கள். அவர் எங்கள் அண்ணன். அவரும் ராமதாஸின் மகன் போன்றவர்" என்றார். ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக ஒரு பேச்சு அரசியல் வட்டாரத்தில் அடிபடுபடும் நிலையில், ராமதாஸ் தரப்பின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications