Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரிடர் நிவாரண நிதி மறுப்பு.. ஓரவஞ்சனை.. தமிழக மக்களுக்கு எதிரான அரசியல்.. கொந்தளித்த திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரிடர் நிவாரணப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவினரின் நோக்கமாகத் தெரிகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் கூறியுள்ளார்.

மிக்ஜாம் புயல் மற்றும், தென் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக தமிழ்நாடு பெரும் இயற்கை பேரிடரை எதிர்கொண்டது. ஆனால், இதை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு கூறியிருந்தது. இதற்கு திருமாவளவன் எம்பி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan MP strongly criticized the central government for denying the National Disaster Relief Fund

புயல் மற்றும் மழை பாதிப்பு குறித்து பிரதமரை சந்தித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, நிதி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்த நிலையில், மத்திய அரசு இதனை தேசிய பேரிடராக அறிவிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் இது குறித்து மத்திய அரசின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

"கடந்த டிசம்பர் 04 அன்று வீசிய 'மிக்ஜாம்' புயலால் - பெய்த பெருமழையால் சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல வட மாவட்டங்களும்; அதன் பின்னர் கடந்த டிசம்பர் 16, 17 நாட்களில் பெய்த வரலாறு காணாத பெருமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரை மாநில அரசு மட்டுமே தன்னந்தனியாக எதிர்கொள்வது இயலாத ஒன்றாகும்.

எனவே, இதனைத் 'தீவிர இயற்கைப் பேரிடராக' (Natural Calamity of Severe Nature ) அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) இடைக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் வாயிலாக முதலில் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், 19.12.2023 அன்று புது தில்லியில் இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இடைக்கால நிவாரணமாக 2000 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த 09.12.2023 அன்று தமிழ்நாட்டிலேயே முதல் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதலமைச்சரிடம் ரூ.10 லட்சம் நிதி வழங்கியதோடு, 19.12.2023 அன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கோரி அறிக்கை அளித்தோம்.

மேலும் 07.12.2023 மற்றும் 19.12.2023 ஆகிய நாட்களில் இரண்டுமுறை உள்துறை அமைச்சருக்கு கடிதங்கள் எழுதி அவற்றின் மூலமாகவும் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமரோ உள்துறை அமைச்சரோ நேரில் பார்வையிட வேண்டும் எனவும் கோரினோம்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே பிரதமர் தமிழ்நாடு முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததோடு ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்திருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்த போதும் அதைப் பரிவோடு பிரதமர் கேட்டுக் கொண்டார் என்றே தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதுவரை தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட உதவித்தொகை அளிக்கவில்லை.

நிதி வழங்குவதற்கு மாறாக இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களும் பாஜகவினரும் நிவாரணப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசைக் குறை சொல்லியும், அவமதிக்கும் வகையில் பேசியும் அவதூறு செய்து வருகின்றனர். பேரிடர் நிவாரணப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவினரின் நோக்கமாகத் தெரிகிறது.

இந்திய ஒன்றிய அரசு வசூலிக்கும் வரி வருவாயில் மிக அதிகமான தொகையை வழங்கும் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு வரியாக செலுத்தும் தொகைக்கும் அதற்குக் கிடைக்கும் பங்கீட்டுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. எப்படி வரிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ, அதுபோலவே பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்குவதிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ஆண்டொன்றுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகை வெறும் 900 கோடி மட்டுமே. ஆனால் பேரிடர் பாதிப்பு அதிகம் இல்லாத பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகமான தொகையை ஒன்றிய அரசு ஒதுக்குகிறது.

தீவிர இயற்கைப் பேரிடர் நேரிட்டாலும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க முடியாது என்று மறுக்கும் ஒன்றிய அரசு, பாஜக ஆளும் குஜராத் முதலான மாநிலங்களுக்கு அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே நிதியை வாரி வழங்குகிறது. இப்படி ஓரவஞ்சனை செய்வது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான அரசியலே தவிர வேறில்லை. இது இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு நேர் எதிரானதாகும்.

தீவிர பேரிடர் காலத்திலும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் இத்தகையப் போக்கைக் கைவிட்டு, இந்திய மத்திய அரசு உடனடியாகத் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நிவாரணத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+