“தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது” - சொல்கிறார் திருமாவளவன்
சென்னை: தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினர், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என தெரிவித்திருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும், தமிழர் எழுச்சி நாளாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். சென்னை காமராஜர் அரங்கில் நேற்றிரவு இந்த நிகழ்ச்சி தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இதில் உரையாற்றிய திருமாவளவன் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும் பேசியதாவது, "தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுக அரசை எதிர்த்து போராடவில்லை என நம்மை விமர்சிக்கிறார்கள். ஆனால் நான் போராட்ட களத்திற்கு சென்று, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரை சந்தித்து அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். 13 நாட்களும் அமைச்சர்களுடனும், போராட்டக்காரர்களுடனும் நான் பேசிக்கொண்டிருந்தேன். இந்த விஷயத்தில் போராட்டக்காரர்களின் கோரிக்களை ஆதரிக்கிற அதே நேரத்தில், குப்பை அள்ளும் தொழிலை நிரந்தரப்படுத்தி, காலம் முழுவதும் நீங்கள் அதையே செய்துக்கொண்டிருங்கள் என்று சொல்வது நியாயம் அல்ல.
குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கை. ஆனால் அவர்களுக்கான பணி நிரந்தரம் என்பது, 'குப்பையை அள்ளுபவர்களே அள்ளட்டும்' என்கிற கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. ஆக பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்பதுதான் சரியான கருத்து. அதிலிருந்து அவர்களை மீட்க வேண்டும் என்பதுதான் சமூகநீதி" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications