விஜய் மீது எனக்கு மதிப்பு உண்டு.. அவர் பாஜகவுடன் இணக்கம் காட்ட கூடாது.. திருவாவளவன் அட்வைஸ்!
சென்னை: தவெக தலைவர் விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். பாஜகவுடன் விஜய் காட்டுகிற இணக்கம், அவருக்கு பயன் தராது என்று கூறிய அவர், செங்கோட்டையன் எதன் பின்னணியில் தவெகவில் இணைந்தார் என்பது தெரியாது எனவும் கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தவெகவில் இணைந்துள்ளார். 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனுக்கு, தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருடன் செங்கோட்டையன் இணைந்து செயல்பட்டு வந்தார்.

அதேபோல் டெல்லியில் உள்ள பாஜக தலைமையுடன் செங்கோட்டையன் இணக்கமாக இருந்தார். அண்மையில் கூட டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்தித்துவிட்டு திரும்பினார். இருந்த போதும் செங்கோட்டையன் திடீரென தவெகவை நாடி சென்றது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே விஜய்யை சுற்றி பாஜகவுக்கு நெருக்கமானவர்களே அதிகம் இருக்கின்றனர். புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட அனைவருமே ஏதோ ஒரு வகையில் பாஜகவுடன் இணக்கமாக இருந்தவர்கள். அதிலும் சிடிஆர் நிர்மல் குமார் நேரடியாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்.
இப்படியான சூழலில் பாஜகவுக்கு நெருக்கமாக உள்ள செங்கோட்டையனும் தவெக பக்கம் சென்றுள்ளார். இதனால் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் எழுந்துள்ளன. இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், செங்கோட்டையன் எந்த பின்னணியில் தவெகவில் இணைந்தார் என்பது தெரியவில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் நகர்வுகளில், ஒவ்வொரு அங்குலத்திலும் பாஜகவின் கைகளே உள்ளன. அதை மட்டும் மருக்க முடியாது. தவெக தனித்து இயங்குகிறது என்ற நம்பிக்கையை பெற்றால்தான், மக்கள் அந்த கட்சியின் மீது நம்பிக்கை வைப்பார்கள். ஒருவேளை பாஜகவுடன் இணக்கமாக இருக்கும் தோற்றம் உருவானால், மக்கள் அந்த கட்சியை எதிரியாக தான் பார்ப்பார்கள்.
பாஜகவுடன் உறவு வைத்து கொள்வதை சீர்தூக்கி பார்க்கும் அணுகுமுறை தமிழக மக்களிடம் அதிகமாக உள்ளது. விஜய் மீது எனக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அவர் அரசியலுக்கு வந்ததை முதலில் வரவேற்றவன் நான்.. அவர் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.. ஆனால் தற்போது அப்படி இயங்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. பாஜகவுடன் விஜய் காட்டும் இணக்கம், அவருக்கு பயன் தராது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications