அதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை, அதிபர் ஆட்சிக்கு வழிகோலும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன் லோக்சபாவில் இன்று தனது உரையில் குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி தலைவர் உறுப்பினர்களும் லோக்சபாவில் உரையாற்றி வந்தனர். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவனுக்கும், இதன் மீது பேச, வாய்ப்பு கிடைத்தது.

அப்போது அவர் பேசுகையில், குடியரசு தலைவர் உரையில் தெரிவித்த திட்டங்களை மத்திய அரசு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். அதேநேரம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை ஏற்க முடியாது. இந்தியாவை அதிபர் ஆட்சி நிலைக்கு கொண்டு வரக்கூடிய மறைமுக திட்டம் தான் இந்த தேர்தல் நடைமுறை. நாட்டு அரசியல் சாசனத்திற்கும், மக்களுக்கும் எதிரான திட்டம் தான் இந்த தேர்தல் முறை.
தாழ்த்தப்பட்டோருக்கு குடியரசுத் தலைவர் உரையில் எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. நாட்டில், பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.












Click it and Unblock the Notifications