கோபி, சுதாகருக்கு விருது கொடுக்கணும்.. நேர்மையா கருத்து சொல்லிருக்காங்க.. நெகிழ்ந்த திருமாவளவன்!
சென்னை: சொசைட்டி பரிதாபங்கள் என்ற வீடியோவில் நேர்மையாக விமர்சனத்தை முன் வைத்த கோபி மற்றும் சுதாகர் இரண்டு பேருக்கும் என்ன விருது கொடுத்தாலும் பொருந்தும் என்று விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். அப்போது அங்கிருந்த விசிக தொண்டர்களும் கைகளைத் தட்டி பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
அண்மையில் நெல்லை கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் காதலில் இருந்ததால், அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் தனியாகக் கவினை வரவழைத்து வெட்டி கொலை செய்தார். இதன்பின் நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இதன்பின் எஃப்ஐஆரில் சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகியோரின் பெயரும் சேர்க்கப்பட்டது.

இதன்பின் காவல் உதவி ஆய்வாளரான சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார். இதன்பின் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார். அதேபோல் கவின் கொலையைக் கண்டித்து நெல்லையிலேயே விசிக சார்பாகப் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.
தவெக உட்பட மற்ற கட்சிகள் கவின் ஆவணக் கொலை சம்பவத்தில் அமைதி காத்த நிலையில், பரிதாபங்கள் யூட்யூப் சேனலில் சொசைட்டி பாவங்கள் என்ற வீடியோ கோபி, சுதாகர் மற்றும் டிராவிட் செல்வம் ஆகிய மூவரால் வெளியிடப்பட்டது. இதற்கு பொதுமக்கள், அரசியல் இயக்கங்கள் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதனிடையே கோவையில் வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் பரிதாபங்கள் யூட்யூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இந்த விவகாரம் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
அதிலும் கவினை படுகொலை செய்த விதத்தை கோபி அப்பட்டமாக, மிளகாய் பொடியை முகத்தில் அடித்துவிட்டு முதுகில் குத்தி கொலை செய்திருக்கிறான்.. இதுதான் வீரரா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் பரிதாபங்களில் சேனலின் கோபி மற்றும் சுதாகர் இருவரையும் விசிக தலைவர் திருமாவளவன் மனதார பாராட்டி இருக்கிறார்.
இதுதொடர்பாக திருமாவளவன் பேசுகையில், 2 தம்பிங்க.. கோபி, சுதாகர்னு.. ரொம்பவும் நேர்மையாக யாரையும் நேரடியாக சொல்லாமல் கருத்து சொல்லி இருக்கிறார்கள். இந்த பிள்ளைகளுக்கு என்ன விருது கொடுத்தாலும் பொருந்தும்.. யாரையும் மனதில் வைத்து பேசவில்லை.. நாம் சொல்லிருந்தால் அது பெரிய பிரச்சனையாக மாறி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications