திமுகவிடம் கூடுதலாக சீட் கேட்போம்.. அப்படியே விஜய் கட்சி பற்றி கேட்டதும் திருமா கொடுத்த ரிப்ளை!
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என்றும், பொது தொகுதி கேட்போம் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் 2019 லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். இந்நிலையில், இந்த தேர்தலிலும் திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறது.

இந்த முறை, விசிக, கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் திருச்சியில் விசிக சார்பில் நடத்தப்பட்ட வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தங்களது பலத்தைக் காட்டியுள்ள விசிக, இந்த முறை இரண்டுக்கும் அதிகமான தொகுதிகளையே கேட்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, "திமுக தலைமையிலான கூட்டணி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. தமிழக மக்களின் ஆதரவை பெற்றுள்ள இந்தியா கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறும்.
நாளை அல்லது நாளை மறுநாள் இடதுசாரி கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம். நாங்கள் பொது தொகுதிகளையும் கேட்கத்தான் போகிறோம். கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதால் எல்லா கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டி உள்ளது. அதன் அடிப்படையில் திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் சுமூகமான முறையில் பேசி தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வோம்." என்றார்.
மேலும், நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "யாரும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம். அதுதான் ஜனநாயகம். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. முற்போக்கு பார்வை, சிந்தனை இருப்பதாகத் தெரிகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications