இயேசு பெருமானின் போதனைகள் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது! திருமாவளவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
சென்னை: இயேசு பெருமான் பிறந்தநாளில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
உலகமெங்கும் சகோதரத்துவத்தை மென்மேலும் வளர்த்தெடுக்கவும் வலுப்படுத்தவும் இந்த நன்னாளில் யாவரும் உறுதியேற்போம் என அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து வருமாறு;

''இயேசு பெருமானின் போதனைகள் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது. உயர்வு தாழ்வு என்னும் பாகுபாட்டுக்கு எதிரானது. சாதி, மதம், மொழி, இனம், தேசம் போன்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் சகோதரத்துவத்தால் இணைக்கக்கூடியது. ஆகவே தான், கிறிஸ்தவம் உலகமெங்கும் பரவி இன்றும் வெற்றிகரமாக மனிதகுலத்தை வழிநடத்தி வருகிறது.
இயேசு பெருமான் சகோதரத்துவத்தின் அடையாளமாகும். எனவே, அவரைப் போற்றுவது என்பது சகோதரத்துவத்தைப் போற்றுவதேயாகும். சகோதரத்துவம் தழைக்குமிடத்தில் தான் சனநாயகம் கோலோச்சும். சனநாயகமும் சமத்துவமும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள வெவ்வேறு புள்ளிகளாகும். இவற்றுக்கு அடிப்படையானதொரு கருத்தியல் தான் சகோதரத்துவம் என்பதாகும். அத்தகைய சகோதரத்துவத்தை தமது உயிர்மூச்சாகக் கொண்டதே இயேசு பெருமானின் கிறிஸ்தவம் ஆகும்.
இத்தகு சிறப்புக்குரிய கிறிஸ்தவத்தை, உலகெங்கும் வாழும் மக்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ள மகத்தான பேராளுமையே இயேசு பெருமான் ஆவார். அவரை நினைவுகூர்ந்து இந்நாளில் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதாவது. உலகமெங்கும் சகோதரத்துவத்தை மென்மேலும் வளர்த்தெடுக்கவும் வலுப்படுத்தவும் இந்த நன்னாளில் யாவரும் உறுதியேற்போம்.
சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் எனது மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications