தமிழக மக்கள் விஜய்க்கு தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.. திருமாவளவன் பரபர பேச்சு
சென்னை: த.வெ.க. ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு அளித்துள்ளது. ஆனால், இடதுசாரி கட்சிகளும், நாங்களும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இது குறித்து எங்கள் நிர்வாகிகளுடன் மிக விரைவில், நாளையோ அல்லது நாளை மறுநாளோ ஆலோசனை நடத்த உள்ளோம்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 எம்.எல்.ஏக்கள் மட்டுமே அக்கட்சிக்கு இருப்பதால் கூட்டணியின் ஆதரவை பெற தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய்யின் தவெக கோரியுள்ள நிலையில், இது குறித்து இரண்டு கட்சிகளும் இன்னும் முடிவு எடுக்கவில்லை. தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரை சந்தித்து இன்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் தற்போது வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனால், தமிழக அரசியல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இந்த சூழலில் விசிக தலைவர் தொல் திருமாவளன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
"தமிழக மக்கள் விஜய்க்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளனர். எனவே அவர் ஆட்சி அமைக்க வேண்டும். அது மக்களின் தீர்ப்பு. ஆனால், அவருக்கு முழுமையான பெரும்பான்மை இல்லை. இதனால், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், வி.சி.க., ஐ.யு.எம்.எல். உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை அவர் கோரியுள்ளார்.
த.வெ.க. ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு அளித்துள்ளது. ஆனால், இடதுசாரி கட்சிகளும், நாங்களும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இது குறித்து எங்கள் நிர்வாகிகளுடன் மிக விரைவில், நாளையோ அல்லது நாளை மறுநாளோ ஆலோசனை நடத்த உள்ளோம். அந்த ஆலோசனைகளுக்குப் பிறகே த.வெ.க. தலைவர் வைத்துள்ள கோரிக்கை குறித்து நான் முடிவு எடுக்க முடியும்" என்றார்.
முன்னதாக தவெக ஆதரவு கேட்ட நிலையில் அது குறித்து விவாதிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர் நிலை கூட்டம் நாளை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications