"தற்குறி எடப்பாடி பழனிசாமி என்று பேசியவர் அண்ணாமலை.. அப்போ எங்கே போனாங்க?”.. திருமாவளவன் தாக்கு!
சென்னை: "தற்குறி எடப்பாடி பழனிசாமி என்று பேசியவர் அண்ணாமலை. அப்போது அவர்கள் வாயை மூடிக்கொண்டு எங்கேயோ மவுனித்துக் கிடந்தார்கள்." என விசிக தலைவர் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், "பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. பொருந்தா கூட்டணி என்பதால் மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது.

அந்தக் கூட்டணிக்குச் செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? மக்கள் சக்தியே நம்முடன் அணியா அணியா திரண்டு இருக்கும்போது இந்த அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு எதுக்கு? நம்முடைய கூட்டணி சுயமரியாதை கூட்டணியாக இருக்கும்.
எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் வேதனையுடன் தவிக்கிறார்கள்." எனப் பேசி இருந்தார் விஜய். அதிமுகவை கடுமையாக விமர்சித்து விஜய் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய், அதிமுகவை விமர்சித்துப் பேசியது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திருமாவளவன், "அதிமுக தான் அதுகுறித்து பதில் சொல்ல வேண்டும். நான் எம்ஜிஆரை பற்றி சொன்ன உடனயே ஆ.. ஊ.. என்று எகிறிக் குதித்தவர்கள் இப்போது வாயை மூடிக்கொண்டுள்ளனர். எம்ஜிஆர், அண்ணா, பெரியாரைப் பற்றி மிகவும் கொச்சையாக பேசுகிற பாஜகவினரை பற்றி அதிமுகவினர் ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை.
தற்குறி எடப்பாடி பழனிசாமி என்று பேசியவர் அண்ணாமலை. அப்போது அவர்கள் வாயை மூடிக்கொண்டு எங்கேயோ மவுனித்துக் கிடந்தார்கள். வாய் திறந்து பேசவில்லை. சமூகத்தில் இருக்கின்ற விமர்சனங்கள் இப்படி இருக்கின்றன என்று யாரோ சொன்னதை மேற்கோள் காட்டி பேசினேன். உடனே பாய்ந்து, பிராண்டினார்கள். இப்போது விஜய் சொன்னதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என நீங்கள் கேட்டு சொல்லுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications