திருமா - ஸ்டாலின் ரகசிய சந்திப்பு? 3 தொகுதி 2 ஆனது ஏன்? உண்மையை உடைத்த பாலாஜி!
சென்னை: விசிகவுக்கு தொகுதி ஒதுக்குவதற்கு முன்னால், திருமாவளவனும் ஸ்டாலினும் தனிமையில் சந்தித்து உரையாடித்தான் இந்த முடிவை எடுத்தார்கள் என்ற ஒரு தகவலை எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி ஒதுக்குவது தொடர்பாகத் தொடர்ந்து சில சலசலப்புகள் எழுந்து வந்தன. விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன், தங்களின் கட்சி முன்பைவிட வளர்ந்துள்ளதாகவும், அதனடிப்படையில் 3 தொகுதிகளையாவது திமுக ஒதுக்க வேண்டும் என்றும் அதில் ஒரு தொகுதி பொதுத் தொகுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

ஆனால், அதற்கு திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் வாய்ப்பு இல்லை என்று மறுத்து வருவதாகவே தகவல்கள் கசிந்தன.
ஆகவே, விசிக அதிமுக அணிக்கு மாறலாம் என்றும் சொல்லப்பட்டது. அதற்கு விளக்கமளித்து தொல்.திருமாவளவன், 'இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் விசிக தேர்தலைச் சந்திக்கும். அதில் உறுதியாக உள்ளோம்' என்றும் தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் விசிகவுக்கு ஏன் திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அதற்குப் பின்னால் இருந்த பிரச்சினை என்ன என்பது பற்றி அக்கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேசியுள்ள எஸ்.எஸ். பாலாஜி , "கடந்த 2021 தேர்தலுக்கு முன்னால், 'நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் கூட பரவாயில்லை. நாங்கள் மதச் சார்பற்ற திமுக கூட்டணிக்கு ஆதரவு தருகிறோம்' என்று அறிவித்தார். அப்போது ஏன் அப்படிச் சொன்னார் என்றால், தேர்தலில் போட்டியிடுவது என்பது முக்கியமான விசயம்.
அதேநேரத்தில் ஒரு சில அதிகார சக்திகளை ஆட்சியமைக்கவிடாமல் தடுப்பதற்காகவும் நாங்கள் தேர்தலில் கூட்டணி வைக்கிறோம். வெறும் சீட்டுக்காக என்று பார்த்து விசிக தேர்தலை அணுகுவது இல்லை. அதன் வெளிப்பாடுதான் தொகுதிப் பங்கீடு.
இந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று கட்சிகள் அனைத்து சில ஆண்டுகளாக அதே கூட்டணியில் இருப்பவைதான். பெரிய அளவில் எந்தக் கட்சியும் வெளியே செல்லவில்லை. விசிகவுக்காக தொகுதியைக் கூட்ட வேண்டும் என்றால், திமுகவின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அல்லது காங்கிரஸ் எண்ணிக்கையில் சில சீட்டுகளைக் குறைக்க வேண்டும்.

எங்களுக்குக் கூடுதலாகச் சீட்டு கேட்பது நியாயமானது என்று நாங்கள் உணருகிறோம். அதே நேரம் மற்றவர்கள் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது நியாயம் இல்லை என்பதையும் நாங்கள் உணருகிறோம்.
இதில் இன்னொரு விசயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். கடந்த முறை விசிக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். ஆனால், இந்த முறை இரண்டு சீட்டுகளும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம்.
முன்பு அவர்களின் எண்ணிக்கையிலிருந்த தொகுதியில் இப்போது எங்களது கணக்கில் சேர்ந்துள்ளது. அதேபோல மதிமுகவும் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளது. அப்படிப் பார்த்தால் திமுகவின் எம்பிகளின் எண்ணிக்கை முன்பைவிட குறைகிறது.

அதை திமுக சுட்டிக்காட்டுகிறது. அதில் உள்ள நியாயத்தையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொள்ளவில்லை என்றால், கூட்டணி என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
இந்த விசயங்களை எல்லாம் தாண்டி, விசிகவுக்கு 3 தொகுதிகளையாவது ஒதுக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதில் என்ன விதமான நெருக்கடிகள் உள்ளன என்பது குறித்து தொல்.திருமாவளவனும் ஸ்டாலினும் தனியாகச் சந்தித்து அரை மணிநேரம் கலந்து ஆலோசித்தனர்.
அந்தச் சந்திப்பில் வேறு யாருமே இல்லை. அவர்கள் இருவர் மட்டுமே இருந்தன. அப்படிப் பேசி எடுக்கப்பட்ட முடிவுக்குப் பின்னர்தான் விசிக 2 தொகுதிகளை ஏற்றுக் கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டோம்.

விசிகவுக்கு ஏற்கெனவே திமுக பொதுத் தொத்திகளை ஒதுக்கி உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுத் தொகுதியில் நின்றுதான் விசிக எம்.எல்.ஏக்களாக சட்டம்னறத்திற்கு சென்றுள்ளோம்.
எங்கள் மீது புதியதாக அக்கறை உள்ளதைப் போலப் பேசும் சிலர், இதை ஏன் சொல்வதில்லை. அப்படி என்றால் அவர்களின் மனநிலை என்ன? ஏன் சொல்கிறார்கள்? எல்லாம் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
திமுக இதற்கு முன்பாகவே விசிகவுக்கு பொதுத் தொகுதியை வழங்கி இருக்கிறது. எங்கள் கூட்டணியில் பொதுத் தொகுதியை ஒதுக்கியதைப்போல் மற்ற கூட்டணிகளில் உள்ள தலித் கட்சிகளுக்கு எத்தனை பொதுத் தொகுதி களை ஒதுக்கி இருக்கிறார்கள்.

அப்படி எத்தனைப் பேர் போட்டியிட்டு வென்று இருக்கிறார்கள்? அதைச் சொல்ல முடியுமா? அப்படி யாருமே ஒதுக்கவில்லையே? திமுகதானே ஒதுக்கித் தந்துள்ளது.
விசிக மீது அக்கறை உள்ளதால் அவர்கள் அப்படிப் பேசவில்லை. எதையாவது பேசி இந்தக் கூட்டணியை உடைத்து விட வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார்கள்" என்கிறார்.













Click it and Unblock the Notifications