முதல்வர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம்.. நெகிழ்ந்த திருமாவளவன்!
சென்னை: நீதிமன்றங்களில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்ட நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், முதல்வர் ஸ்டாலின், தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்களை தவிர மற்ற எவரது படங்களையும் வைக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இது வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவைச் சந்தித்து இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமை நீதிபதியிடம் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் வழங்கித் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்த தகவலை தமிழ்நாடு அரசு நேற்று இரவு வெளியிட்டது. அம்பேத்கர் படங்கள் இடம்பெறக்கூடாது என்ற முடிவால் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்ட இந்த தகவல் பதற்றத்தைத் தணித்தது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படம் மற்றும் திருவுருவச் சிலை ஆகியவற்றை நீதிமன்ற வளாகங்களில் அப்புறப்படுத்தும்படி எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை தமிழ்நாடு உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் சட்ட அமைச்சர் ரகுபதி அவர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களுக்கும் விசிக சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications