திருமாவளவன் முன் வைத்த டிமாண்ட்கள்... முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டும் செல்லும் அமைச்சர்..!
சென்னை: ஆதிதிராவிடர் நல ஆணைய சட்ட முன் வடிவில் 9 திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
தனக்கு கடிதம் மூலம் திருமா முன்வைத்துள்ள கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஈடுபட்டுள்ளார்.

ஆதிதிராவிடர் நல ஆணையம் தொடர்பாக திருமாவளவன் எழுதிய கடிதத்தின் விவரம் பின்வருமாறு;
1) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவராக ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த ஒருவரே தலைவராக நியமிக்கப்படுவார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
2) ஆணையத்தின் தலைவராக நியமிக்கக்கூடிய உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி குறைந்தது 64 வயதுடையவராக இருக்க வேண்டும் என்ற வரையறையை மாற்றி, ஆதி திராவிடர் சமூகத்தை சார்ந்த சமூக-அரசியல் ஈடுபாட்டுடன் கூடிய சிறப்பியல்புகளை கொண்ட ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார் என வரையறையை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
3) பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒருவரை தலைவராகவோ, துணைத்தலைவராகவோ நியமிக்கும் வகையில் வகுக்கப்பட்டுள்ள வரையறையை நடைமுறைச் சிக்கலை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
4) ஆணையத்தின் உறுப்பினர்களில் பெண் ஒருவர் இடம்பெறுவார் என சட்ட முன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதனை இரண்டு பெண் உறுப்பினர்களாக மாற்ற வேண்டும். அதாவது ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த பெண் அல்லாமல் சமூக மற்றும் அரசியல் தளங்களில் பட்டறிவு பெற்ற பிற சமூக பெண் ஒருவரையும் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்க வேண்டும்.
5) தலைவர் இல்லாத போது அந்த பொறுப்பை வகிக்க துணைத்தலைவரை மட்டுமே நியமிக்க வேண்டும்.
6) ஆணையம் உயிர்த்துடிப்புடன் இருக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடும் என்பதை மாற்றியமைத்து மாதம் ஒரு முறை கூடுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7) ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் தன்னாட்சி தன்மையை வலுவிழக்கச் செய்யும் வரையறைகளை நீக்க வேண்டும்.
8) அரசானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானியக்கோரிக்கை மற்றும் இதர கொள்கை கோட்பாடுகள் தொடர்பாக ஆணையத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என மாற்ற வேண்டும்.
9) ஆணையமானது ஆண்டுக்கு இரண்டு முறை அறிக்கையை தயார் செய்து அரசுக்கு அளிக்க வேண்டும் என்பதை சட்ட முன்வடிவிலேயே சேர்க்க வேண்டும்.
மேற்கண்ட இந்த 9 கோரிக்கைகளையும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு கடிதம் மூலமாக முன் வைத்துள்ளார். இந்த விவகாரத்தை முதலமைச்சர் கவனத்துக்கு உடனடியாக கொண்டு சென்று, அவர் கூறும் ஆலோசனைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.












Click it and Unblock the Notifications