விஏஓ டூ தாசில்தார்.. புதிய வீட்டுக்கு வரி.. திருவள்ளூரில் பில் கலெக்டருக்கு மறக்க முடியாத சம்பவம்
சென்னை: சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் திருவேங்கடம் நகரைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் தனது மருமகள் தமிழ்ச்செல்வி பெயரில் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வரி கட்டுவதற்காக நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்.. அப்போது திருநின்றவூர் நகராட்சி பில் கலெக்டராக பணிபுரியும் சண்முகம் புதிதாக கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயிக்க ரூ.5 ஆயிரம் பணத்தை முன்கூட்டியே தர வேண்டும் என்று கோரினாராம். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பொதுவாக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் அவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால் உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறார்கள். விஏஓ கேட்கிறார், பில் கலெக்டர் கேட்கிறார், சர்வேயர் கேட்கிறார், மின் பொறியாளர் கேட்கிறார், தாசில்தார் கேட்கிறார், சார் பதிவாளர் கேட்கிறார் என பல்வேறு அதிகாரிகள் லஞ்சம் கேட்கும் போது அமைதியாக இருக்காமல், அவர்கள் மீது புகார் அளிக்கலாம்.. அப்படி புகார் அளித்தால் போலீசார் அதன் உண்மை தன்மையை உறுதி செய்து நடவடிக்கை எடுப்பார்கள். அதன்படி ஏராளமான அதிகாரிகள் ஒவ்வொரு வாரமும் சிக்கி வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் திருவேங்கடம் நகர் 2-வது தெருவை சேர்ந்த 79 வயதாகும் மாயாண்டி என்பவர் தனது மருமகள் தமிழ்ச்செல்வி பெயரில் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வரி கட்டுவதற்காக திருநின்றவூர் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார். இந்நிலையில் திருநின்றவூர் நகராட்சி பில் கலெக்டராக பணிபுரியும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த 49 வயதாகும் சண்முகம் என்பவர் வீட்டு வரியை நிர்ணயிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டாராம். ரூ.5 ஆயிரம் பணத்தை முன்கூட்டியே தர வேண்டும் என்றும், மீதி பணத்தை வீட்டு வரி நிர்ணயம் செய்து முடித்த பிறகு கொடுக்குமாறு சண்முகம் கூறினாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முதியவர் மாயாண்டி கடந்த பிப்ரவரி 6-ந்தேதி இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா ஆகியோர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை மாயாண்டியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அலுவலகத்தில் இருந்த பில் கலெக்டர் சண்முகத்திடம் கொடுக்குமாறு அனுப்பி அங்கு மறைவாக காத்திருந்தனர்.
மாயாண்டி திருநின்றவூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்த பில் கலெக்டர் சண்முகத்தை நேரில் சந்தித்து பணத்தை கொடுத்தாராம். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருநின்றவூர் நகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருநின்றவூர் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications