“திருப்பரங்குன்றம்..” வாயை விட்ட மோடி! திரும்பி பார்த்த எடப்பாடி பழனிசாமி! முஸ்லிம் ஓட்டு போச்சா?
சென்னை: மதுராந்தகத்தில் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விஷயத்தில்.. திமுக தங்களது வாக்கு வங்கியை திருப்திப்படுத்த நீதிமன்றத்தையும் அவமதித்தது என்று குற்றம்சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமி மேடையில் அமர்ந்திருக்க.. மோடி இப்படி பேசியது, அதிமுகவுக்கான சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் நெருங்குவதால், என்டிஏ கூட்டணியை பாஜக இறுதி செய்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் என்டிஏ பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த பிரதமர் மோடி, திமுக மீது சரமாரியான விமர்சனங்களை அடுக்கியிருந்தார்.

மோடி பேசியது என்ன?
குறிப்பாக திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து திமுக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அவர் பேசுகையில், "நண்பர்களே நாங்கள் தமிழ் கலாச்சாரம் பற்றி வெறும், வாய்ப்பந்தல் போடுபவர்கள் அல்ல. அதை பாதுகாக்க உறுதியோடு பணியாற்றி வருகிறோம். சில நாட்களுக்கு முன்னர்தான், நமது முருகப்பெருமானுக்கு விளக்கு போடுவது விவாதப் பொருளாக்கப்பட்டது. அப்போது நமது தலைவர்கள் எல்லோரும், பக்தர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தார்கள்.
தமிழர் விரோதி திமுக
ஆனால், திமுகவும் அவர்களின் கூட்டாளிகளும், தங்களது வாக்கு வங்கியை குஷிப்படுத்த நீதிமன்றத்தை கூட விட்டுவைக்கவில்லை. அவர்களையும் அவமானப்படுத்தினார்கள். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை திமுக பிரச்சனையாக்கியது திமுக. தமிழ், தமிழர்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் எதிரி திமுக.
ஜல்லிக்கட்டுக்கு தடை
காங்கிரஸ் மற்றும் திமுகதான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உங்கள் அனைவரையும் அவமானப்படுத்தினார்கள். ஆனால் நமது என்டிஏ அரசு, ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவர அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து கொண்டு வந்தார்கள். இதன் மூலம் தமிழகத்தின் பாரம்பரியத்தை மீட்டு கொடுத்தது. இதன் மூலம் தமிழக இளைஞர்களை கவுரவப்படுத்தியது" என்று பேசியிருக்கிறார்.
பாஜகவின் டோன்
பாஜகவின் டோன் இதுதான். அக்கட்சி இப்படித்தான் பேசும். இதில் புதியதாக எதுவும் இல்லை. ஆனால், மேடையில் எடப்பாடி பழனிசாமியை வைத்துக்கொண்டு இப்படி பேசியிருப்பதுதான் தமிழக அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
எடப்பாடிக்கு நெருக்கடி
அதாவது சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் நாங்கள்தான் என்று எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக தலைவர்கள் பலரும் கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில் திருப்பரங்குன்றம் விஷயத்தை மோடி பேசியிருப்பது அதிமுகவை சங்கடத்தில் தள்ளியிருக்கிறது. ஏற்கெனவே, அதிமுக.. பாஜகவுடன் சேர்ந்ததால்தான் சிறுபான்மையினர் வாக்குகள் திமுக பக்கம் சென்றது என்று பேசப்பட்டு வருகிறது. இதனை மறுத்து, அந்த வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள எடப்பாடி தொடர்ந்து சமாளித்து வருகிறார்.
இப்படி இருக்கையில் எடப்பாடியை மேடையில் வைத்துக்கொண்டு, வங்கியை குஷிப்படுத்த.. திமுக நீதிமன்றத்தை கூட விட்டு வைக்கவில்லை என்று மோடி பேசியிருக்கிறார். போதாத குறைக்கு மோடி பேசுவதற்கு முன்னர்.. அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன் படத்தை எடப்பாடியுடன் சேர்ந்து.. கூட்டணி தலைவர்கள் பரிசளித்திருந்தனர்.
திருப்பரங்குன்றம் விஷயத்தில் எடப்பாடி
திருப்பரங்குன்றம் விஷயம் வெடித்தபோது, மத நல்லிணக்கம் மற்றும் எம்மதமும் சம்மதம் என்கிற நிலைப்பாட்டில்தான் எடப்பாடி பழனிசாமி நின்றார். அவர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு ஆதரவு கொடுத்தார். இருப்பினும், இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினரை போல.. தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என்று போராட்டமெல்லாம் எதையும் நடத்தவில்லை. இப்படி இருக்கையில் மோடியின் பேச்சு எடப்பாடிக்கு நெருக்கடியை கொடுப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆதாரம் என்ன?
அரசியல் விமர்சகர்கள் சொல்வது உண்மைதான். என்டிஏ கூட்டணியில் சேர்ந்த பின்னர் அதிமுகவின் சிறுபான்மையினர் வாக்கு வங்கி கடுமையாக அடிவாங்கியிருக்கிறது. 2019 மக்களவை தேர்தல்தான் என்டிஏ உடன் கூட்டணி அமைத்து அதிமுக சந்தித்த பெரிய தேர்தல். லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் ஆய்வின்படி, இந்த தேர்தலில் தமிழகத்தின் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள் 75-80% திமுக கூட்டணிக்கே சென்றது என்று தெரியவந்தது.
அதேபோல 2021 சட்டமன்ற தேர்தலில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும்.. வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, ராமநாதபுரம் தொகுதிகளில் அதிமுகவின் சிறுபான்மையினர் வாக்குகள் 10-15% குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications