திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. அரசிதழில் வெளியீடு.. விசாரணை எப்போது தொடங்கும்
சென்னை: சிவகங்கை திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கினை சிபிஐக்கு மாற்றுவதாக கடந்த 1 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் சிபிஐ இந்த வழக்கில் விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின் பேரில் ஒருநபர் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித் குமார் (வயது 28). கடந்த 27 ஆம் தேதி அன்று இந்த கோவிலுக்கு விருதுநகரை சேர்ந்த பேராசிரியர் நிகிதா என்பவர் வந்துள்ளார். அவருடன் அவரது அம்மாவும் வந்திருந்தார்.

அஜித் குமார் மரணம்
அவரால் வீல் சேரில் தான் செல்ல முடியும் என்பதால், அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித் குமாரிடம் உதவி கேட்டுள்ளார். காரை பார்க் செய்ய வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் கார் ஓட்டத் தெரியாது என்று கூறி உதவிக்கு ஒருவரை அழைத்து அவர் மூலமாக பார்க் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த காரில் 9 பவுன் நகை இருந்ததாகவும், அதனை காணவில்லை எனவும் நிகிதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரையடுத்து இளைஞர் அஜித் குமாரை போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது அவரை தனிப்படை போலீசாரும் அடித்து உதைத்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 44 காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக அவர் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சிபிஐ விசாரணை எப்போது?
இது தொடர்பாக காவல்துறை மற்றும் தமிழக அரசு மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும் இது தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தர்லால் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. அதன்படி தற்போது நீதிபதி சுந்தர்லால் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே இந்த சம்பவம் தமிழக முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கடந்த 1 ஆம் தேதி இந்த வழக்கினை சிபிஐ வசம் ஒப்படைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மர்மங்கள் அவிழுமா?
இந்த வழக்கில் இன்னும் பல கேள்விகளுக்கு விடை தெரியாமலே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீதும் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும், அவர் யார் மூலமாகவோ அழுத்தம் கொடுத்து தான் இந்த தனிப்படை போலீசார் விசாரித்ததாகவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சிபிஐ விசாரணைக்கு பிறகு இதற்கான கேள்விகளுக்கு விடை தெரிந்துவிடும் என அறியப்படுகிறது. எனினும் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நிகிதா, அஜித் குமார் மீது விரோதம் இல்லை. நான் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்து விசாரிக்க சொன்னாதாக பரவும் தகவல் உண்மையில்லை. நான் ஈ, எறும்புக்கு கூட துரோகம் நினைத்ததில்லை என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications