திருப்புவனம் அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட வழக்கு: விரைவில் கைதாகும் டிஎஸ்பி? முன் ஜாமீன் தள்ளுபடி
சென்னை: அஜித்குமார் லாக் அப் டெத் தொடர்பான வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது அதில் டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்பட 10 பேர் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால், கைது ஆகக்கூடும் என்பதால், டிஎஸ்பி சண்முகசுந்தரம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் டிஎஸ்பி சண்முகசுந்தரம் இந்த வழக்கில் கைதாக கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்குமார் லாக் அப் டெத் வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயிலில் அஜித்குமார் என்ற இளைஞர் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்தார். கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண் பேராசிரியை தனது நகை திருடு போய் விட்டதாக புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், இளைஞர் அஜித்குமாரை அழைத்து சென்ற போலீசார், அடித்து துன்புறுத்தியுள்ளனர். போலீசார் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரையை சேர்ந்த தனிப்படை போலீசாரான கண்ணன், பிரபு, ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன், போலீஸ் வாகன டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட போது, மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றிய சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், ஏட்டு இளையராஜா ஆகியோரையும் குற்றவாளிகளாக இந்த வழக்கில் சேர்த்தது.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி
இதன்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால், கைது ஆகக்கூடும் என்பதால், டிஎஸ்பி சண்முகசுந்தரம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கைது செய்ய வாய்ப்பா?
டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரிக்க போவதால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ தரப்பு தனது வாதத்தை வைத்து இருந்தது. சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications