3 ஏக்கர் நிலம்.. திருவள்ளூர் தனபாக்கியம் மூச்சை பிடித்து கடைசி சொல்.. அரசுக்கு போன அன்புமணி கோரிக்கை
சென்னை: நிலம் பறிபோய்விடும் என்ற அழுத்தமும், மன உளைச்சலும் தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் ஆகும். அப்பாவி மக்களின் நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கொதிப்புடன் கூறியிருக்கிறார்.. அத்துடன், திருவள்ளூர் போராட்டத்தில் உயிரிழந்த தனபாக்கியம் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளார்.
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே, சுமார் ஆயிரத்து 703 ஏக்கர் பரப்பளவில் அறிவுசார் நகரை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, கல்பட்டு, ஞானம்பாக்கம் உள்ளிட்ட 6 கிராமங்களை உள்ளடக்கிய 870 ஏக்கர் பரப்பளவில் அறிவுசார் நகரத்தை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அந்த பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்...
குறிப்பாக, மேல் மாளிகைபட்டைச் சேர்ந்த தனபாக்கியத்தின் 3 ஏக்கர் நிலத்தை அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்திற்காக அரசு கையகப்படுத்தும் நிலை இருந்தது.. எனவே, தனபாக்கியம் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நிலத்திலேயே விழுந்து செத்துடுவேன்இப்படிப்பட்ட சூழலில்தான், அங்கு நேரடியாகவே சென்ற பாமக தலைவர் அன்புமணி, திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பிறகு, வயலில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தில்தான், பெண் விவசாயி, தனபாக்கியமும் ஈடுபட்டார்.. நிலத்தை கையகப்படுத்தினால் நிலத்திலேயே விழுந்து செத்து விடுவேன் என்றும் மேடையில் பேசியிருந்தார்.. ஆனால், திடீரென தனபாக்கியம், மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.. இதனால் அன்புமணி உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அத்தனை பேரும் அதிர்ச்சி அடைந்தனர். . தனபாக்கியம் உடலுக்கு பாமக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அறிவுசார் நகரம்
இந்நிலையில் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"திருவள்ளூர் மாவட்டம் செங்காத்தகுளம் பகுதியில் முப்போகம் விளையும் விவசாய நிலங்களை அறிவுசார் நகரம் அமைப்பதற்காக கையகப்படுத்தும் திமுக அரசைக் கண்டித்து பா.ம.க. சார்பில் நேற்று முன்நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொண்ட மேல்மாளிகைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தனபாக்கியம் என்ற பெண்மணி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் வேதனை அடைந்தேன்.
3 ஏக்கர் நிலம் மட்டுமே சொந்தம்
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அறிவுசார் நகரம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களைப் பார்ப்பதற்காக நான் சென்றிருந்த போது, தனபாக்கியம் என்னை சந்தித்து முறையிட்டார். அப்போதே அவர் கலங்கிய மன நிலையில் தான் இருந்தார்.
அவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாகவும், அதையும் அடி மாட்டு விலைக்கு அரசு பறித்துக் கொண்டால் தமக்கு வாழ்வாதாரமே இருக்காது என்று கலங்கினார். அவருக்கு ஆறுதல் கூறிய நான், உங்களின் நிலம் கையகப்படுத்தப்படாமல் பாதுகாப்பேன் என்று உறுதியளித்தேன்.
திமுக அரசு பறிக்கும் உயிர்
அதைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். அதன் பின் வீட்டில் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை நம்ப முடியவில்லை. நிலம் பறிபோய்விடும் என்ற அழுத்தமும், மன உளைச்சலும் தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் ஆகும். அப்பாவி மக்களின் நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை.
விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் நிலங்களை பறிக்கும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். விளைநிலங்கள் எதற்காகவும் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். உயிரிழந்த தனபாக்கியம் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டள்ளார்.












Click it and Unblock the Notifications