தமிழ்நாட்டில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.. காவி உடைக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி
சென்னை: உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள் என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்.டுள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் காவி உடை அணிந்த வள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதிலும் ஜனவரி 16ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. பல தலைவர்களும் திருவள்ளுவருக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தி வருகின்றனர். திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து சனாதன துறவி என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையான நிலையில்,
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ட்விட்டர் பதிவும் விவாதப்பொருளாகியுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.
குறள் நெறி நம் வழி!
குறள் வழியே நம் நெறி! என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

முன்னதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது.
காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம் என்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications