ஓ இவர்தான் நிற்க போகிறாரா? திருவாரூர் திமுக வேட்பாளர் பற்றி ஸ்டாலின் கொடுத்த க்ளூ!
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்து ஸ்டாலின் விரைவில் முடிவு செய்ய உள்ளார்.
Recommended Video
சென்னை: திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் முடிவு செய்ய உள்ளார். இதற்காக நேற்று அவர் கொடுத்த க்ளூ ஒன்று பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
இந்த நிலையில் திமுக நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தியது. திருவாரூர் தொகுதியில் திமுக சார்பாக யாரை நிற்க வைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
போட்டியில் யார்
திருவாரூர் தேர்தலில் திமுக சார்பாக பூண்டி கலைவாணன்தான் போட்டியிடுவார் என்று தகவல்கள் வருகிறது. திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராக இருக்கிறார் பூண்டி கலைவாணன். திருவாரூரில் அதிக பிரபலமான இவர் அங்கு நிறுத்தப்பட்டால் வெற்றிபெறுவார் என்று கூறப்படுகிறது. இதனால் திமுக இவரை தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
ஸ்டாலின் போட்டி?
அதேசமயம் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வந்தது. முன்னாள் தலைவர் கருணாநிதியின் இடத்தில் இந்நாள் தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்று கூறப்பட்டது. திமுக உறுப்பினர்கள் கூட ஸ்டாலினை நேரடியாக சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தனர்.
ஸ்டாலின் க்ளூ
ஆனால் ஸ்டாலின் தற்போது இது தொடர்பாக க்ளூ ஒன்றை கொடுத்துள்ளார். நேற்று சென்னையில் பேட்டியளித்த ஸ்டாலின், தேர்தலில் நான் நிற்பேனா, துரைமுருகன் நிற்பாரா இல்லையென்றால் அண்ணன் டி.ஆர் பாலு நிற்பாரா என்று விரைவில் தெரியும், என்று கூறினார். இதனால் டி.ஆர் பாலுவை தேர்தலில் களமிறக்க திமுக முயற்சி செய்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
வாய்ப்புள்ளது
மத்திய அமைச்சர் மற்றும் எம்.பியாக இருந்த டி.ஆர் பாலுவிற்கு திருவாரூர் தலிக்கோட்டைதான் சொந்த ஊர். இவரின் மகன் டி.ஆர்.பி ராஜாதான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியின் எம்எல்ஏ. திருவாரூரில் மிகவும் வலுவாக இருக்கும் டி.ஆர் பாலு தேர்தலில் நின்றால் அவருக்கு நிறைய வெற்றி வாய்ப்பு உள்ளது. அதனால் திமுக அவரை நிற்க வைக்க முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.