திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளிப்போகிறதா? அனைத்து கட்சிகளும் ஜகா வாங்கும் பரபர பின்னணி
Recommended Video

சென்னை: திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
கருணாநிதி காலமானதால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு, வரும், 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளுமே வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் காட்டத் தொடங்கின.

பதுங்கிய அதிமுக
திமுக சார்பில் பூண்டி கலைவாணன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காமராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதிமுகவை பொறுத்தளவில், வேட்பாளரை தேர்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை கூடவிருந்த அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் பணி
திமுகவிற்கு இந்த தேர்தலில் ஆதரவளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்டவை அறிவித்தபோதிலும், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதாக தெரியவில்லை. அதிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா, தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.

ஸ்டாலின் கோரிக்கை
புயல் காரணமாக திருவாரூர் சட்டசபை தொகுதி கஜா புயலால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரணப் பணிகள் முடிவடைந்த பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கெல்லாம் உச்சம் வைத்ததுபோல, திமுக தலைவர் ஸ்டாலின், ட்விட்டரில் விடுத்த கோரிக்கையில், "அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்து திருவாரூரில் தேர்தல் நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

எவ்ரிபடி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில், அனைத்து கட்சிகளுமே, கஜா புயல் நிவாரணத்தை காரணம் காட்டி, திருவாரூர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளன. அனைத்து கட்சிகளும் தேர்தலை தள்ளி வைக்க காரணம் கஜா புயல் மட்டுமா இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். புயல் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் எந்த ஒரு தடையும் கிடையாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே, தெளிவுபடுத்திவிட்டது. இருப்பினும் புயல் நிவாரணம் என்ற சாக்கு சொல்லிக்கொண்டு அனைத்து கட்சிகளுமே இடைத்தேர்தலில் இருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்து வருகின்றன.

லோக்சபா தேர்தல் திட்டம்
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு முக்கிய காரணம் இருந்த போதிலும், அனைத்து கட்சிகளுமே பொதுவாக உள்ள காரணம் என்பது நாடாளுமன்ற பொதுத்தேர்தல். நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக, அதிமுக கட்சிகளும், கணிசமாக வெற்றி பெற வேண்டுமென்று தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம், நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சிகளும் கணக்கு வைத்துக்கொண்டு உள்ளன.

பயம்
இந்த நிலையில் திருவாரூர், இடைத்தேர்தலில் பின்னடைவை சந்தித்தால், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுக்க அதன் பாதிப்பு, எதிரொலிக்கும். தங்கள் கட்சியின் செல்வாக்கு குறையும் என்று அனைத்து கட்சிகளுமே பயப்படுகின்றன. இடைத் தேர்தல் நடப்பது ஒரே தொகுதி. அங்கு எப்படியும் ஒரு கட்சிதான், ஜெயிக்க முடியும். அப்படியானால் தோற்கக்கூடிய மற்ற அனைத்து கட்சிகளுக்குமே நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது பெரும் அவஸ்தையாக மாறிவிடும்.
இதனால் தான் திமுக உட்பட அத்தனை கட்சிகளும் திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளி வைப்பது நல்லது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்ற அறிவிப்பு இன்று அல்லது நாளை எப்போது வேண்டுமானாலும் தலைமை தேர்தல் ஆணையத்தில் இருந்து வெளிவரலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications