இருபதில் 19 தொகுதிகளுக்கு ஏன் இடைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை?
சென்னை: தமிழத்தில் 20 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு மட்டுமே இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே 19 தொகுதிகள் இன்னும் காலியாகவே உள்ளன.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி, உடல்நலக்குறைவால், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அவர் வகித்து வந்த திருவாரூர் தொகுதி காலியாகியுள்ளது. இதற்கு ஜனவரி 28ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேநேரம், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏக்களால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும், அதிமுக சட்டசபை உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவால் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கும் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

திருப்பரங்குன்றம்
2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருப்பரங்குன்றத்தில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சீனிவேலு வெற்றி பெற்றார். ஆனால், தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே மே 25ம் தேதி சீனிவேலு உடல்நலக்குறைவால் இறந்தார். இந்த நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது கட்சி பொதுச்செயலாளராக இருந்த, ஜெயலலிதா உடல் நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

கைரேகை
அப்போது அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸ் அறிவிக்கப்பட்டார். ஏ.கே.போஸ்க்கு கட்சியின் சின்னம் ஒதுக்கும் படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்திற்கு பதில், கைரேகை இடம் பெற்றிருந்தது. இதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு இரட்டை இலை சின்னத்தை ஏ.கே.போஸுக்கு வழங்கியது. அவரும் வெற்றி பெற்றார்.

ஏன் அறிவிக்கவில்லை
ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானதுதானா என தெளிவுபடுத்துமாறு திமுக சார்பில் அத் தேர்தலில் போட்டியிட்ட டாக்டர், சரவணன் கோரியிருந்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ளபோதே, உடல்நலக்குறைவால் ஏ.கே.போஸ் மரணமடைந்துவிட்டார். இதை காரணமாக வைத்து வேண்டுமானால் அந்த தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், தகுதி நீக்கத்திற்கு உள்ளான 18 எம்எல்ஏக்கள் பிரச்சினையில், உயர் நீதிமன்ற 3வது நீதிபதி, சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றும், 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தத் தடையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 18 பேர் சார்பிலும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலும் செய்யவில்லை. அப்படியிருந்தும், அந்த தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

ஆட்சிக்கு ஆபத்து
இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒருவேளை, அதில் பெரும்பாலான தொகுதிகளை அதிமுக வெல்ல முடியாவிட்டால், ஆட்சியே கவிழும் வாய்ப்பு உள்ளது. எனவே 18 தொகுதிகளுக்கான தேர்தலை எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்திருந்தன. ஆனால், லோக்சபா தேர்தலின்போது சேர்த்தே 18 தொகுதிகளுக்கும், திருப்பரங்குன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோக்சபா தேர்தலுடன்
லோக்சபா தேர்தல் வரை ஆட்சியை நீடிக்க தீவிர முயற்சி எடுத்து வருவதால், ஏதேதோ காரணங்களை கூறி, தேர்தல் நடத்த விடாமல் சிலர் தேர்தல் ஆணையத்தில் முட்டுக்கட்டை போடுவதாகவும் அதனால்தான் தேர்தல் தள்ளிப்போவதாகவும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலுக்குள் தினகரன் அணி-எடப்பாடி அணியோடு இணைந்துவிட்டால், அப்புறம் ஜாம் ஜாம் என தேர்தலை நடத்த ஒத்துழைப்பு நல்கப்படும் என்று கொசுறு தகவல் கூறுகிறது டெல்லி வட்டாரம்.












Click it and Unblock the Notifications