ஹையோ ஹையோ.. ஓபிஎஸ் இதற்கெல்லாம் ஹேப்பியாக முடியாது.. இந்த தீர்ப்பு நிரந்தரமில்லை- ஜெயக்குமார் பேட்டி
சென்னை: கடந்த ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும்" என கூறியுள்ளார்.
இந்த வழக்கில் எங்கள் தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட அனைத்து வாதங்களையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.
அதிமுகவில் புதிய பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவதாக கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ஓபிஎஸ் தரப்பில் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும், ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் கூறினார். மேலும், இந்த ஆண்டு ஏற்கெனவே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மற்றொரு பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த தீர்ப்பையடுத்து ஓபிஎஸ் தரப்பினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், "இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்துள்ள வெற்றி என்பது நிரந்தரமானது கிடையாது" என்று கூறியுள்ளார். மேலும், "இந்த தீர்ப்பு நிச்சயம் இறுதியான தீர்ப்பு கிடையாது. இதுவரை நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் கட்சியின் விதிகளின்படியே நடந்துள்ளது. எனவே இதன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
Recommended Video
முன்னதாக இனி அடுத்த பொதுக்குழுவை கூட்ட ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. மேலும் இனி வரும் பொதுக்குழுவை ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக வந்துள்ள இந்த தீர்ப்பு குறித்து விரைவில் ஈபிஎஸ் தரப்பு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.