தூத்துக்குடிக்கு இது பொற்காலம்! அடுத்தடுத்து குவியும் முதலீடுகள்! பெரிதாக கால் பதிக்கும் ரிலையன்ஸ்
சென்னை: ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் (RCPL) நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெரிய உணவு மற்றும் FMCG உற்பத்தி மையத்தை அமைக்க முடிவு செய்து உள்ளது. இது தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த பெரிய முதலீடாகக் கருதப்படுகிறது.
தென் தமிழகம், தற்பொழுது தென்னிந்தியாவின் புதிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி மையமாக விரைவாக வளர்ந்து வருகிறது. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அரசின் திட்டமிடப்பட்ட கொள்கைகள் இதற்கு முக்கிய காரணம்.
வியட்நாமிய மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், தூத்துக்குடியில் தனது ஆலையைத் தொடங்கியதன் மூலம், இம்முதலீடுகளுக்கு வழி வகுத்துள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தென் தமிழ்நாடு இந்தியாவின் 'முக்கியமான பொருளாதாரப் பாதை' என தமிழக அரசு அதிகாரிகளால் வர்ணிக்கப்படுகிறது.

தூத்துக்குடி அசாத்திய வளர்ச்சி
முன்னதாக 2024 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரிலையன்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் துறைகளில் புதிய முதலீடுகளை அறிவித்திருந்தார். தற்போது தமிழ்நாட்டில் அவர் மேலும் முதலீடுகளை செய்து வருகிறார்.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது X தள பதிவில், "சிப்காட் அல்லிகுளம் தொழிற்பூங்காவில் ஒருங்கிணைந்த உற்பத்தி வசதியை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.1,156 கோடி முதலீடு செய்யும்" என்று தெரிவித்தார். மேலும், "இந்த வசதி 60 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, தின்பண்டங்கள் முதல் பிஸ்கட்கள், மசாலாப் பொருட்கள் முதல் மாவு, சமையல் எண்ணெய் மற்றும் பல பொருட்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரிலையன்ஸ் 2,000 உள்ளூர் வேலைவாய்ப்பு
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆலை 2,000 உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அமைச்சர் கூறினார். முன்னணி தேசிய FMCG நிறுவனங்களை தமிழ்நாடு தொடர்ந்து ஈர்த்து வருவதாகவும், எந்தவொரு முக்கிய துறையும் பயன்படுத்தப்படாமல் விடப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ்நாடு உணவு மற்றும் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களுக்கான உற்பத்தி மற்றும் தளவாட மையமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது. குறிப்பாக வியட்நாமின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்டின் வருகையுடன் தூத்துக்குடி ஒரு வளர்ந்து வரும் தொழில்துறை மையமாக மாறி வருகிறது.
ரிலையன்ஸ் தூத்துக்குடி
மார்ச் மாதத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் ரூ.515 கோடி மதிப்பிலான உற்பத்தி வசதியைத் திறந்து வைத்தார். மேலும், பெப்சிகோ நிறுவனம் திருச்சியில் உள்ள மணப்பாரை சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.500 கோடிக்கு மேல் முதலீட்டில் உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் தின்பண்டங்களை தயாரிக்க ஒரு உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், டாபர் இந்தியா நிறுவனமும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி மதிப்பில் ஒரு உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications