யோகியை வலுக்கட்டாயமாக நகர்ந்து போக சொன்னாரா மோடி.. கொளுத்தி போடும் சுப்பிரமணிய சுவாமி
சென்னை: மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது என தொடர்ந்து பேசி வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தற்போது யோகி ஆதித்யநாத் வீடியோ ஒன்றை பகிர்ந்து மோடியை கடுமையாக சாடியிருக்கிறார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்பிரமணிய சுவாமி. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என ஆருடம் கூறி வரும் சுப்பிரமணிய சுவாமி, அதேவேளையில் பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வருகிறார். லோக்சபா தேர்தலுக்கு முன்பு இருந்தே மோடியை விமர்சித்து வரும் சுப்பிரமணிய சுவாமி தற்போது தேர்தல் அறிவிப்புக்கு பிறகும் கடுமையாக சாடி வருகிறார்.

யோகி கையை பிடித்து: அவ்வப்போது மோடியின் செயல்பாடுகள் குறித்து காட்டமான விமர்சனங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வரும் சுப்பிரமணிய சுவாமி தற்போது, நிகழ்ச்சி ஒன்றில் யோகி ஆதித்யநாத்தை மோடி, கையை பிடித்து இழுத்து நகர்ந்து செல்லுங்கள் என்று சொல்வது போல அமைந்து இருக்கும் ஒருகாட்சியை பகிர்ந்து மோடியை விமர்சித்துள்ளார். சுப்பிரமணிய சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சுப்பிரமணிய சுவாமி ட்வீட்: "மோடியின் மோசமான பார்ட் இது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதை அனுமதிக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், உத்தர பிரதேசம் கடவுள் ராமர் மற்றும் கிருஷ்ணருடைய நிலம்" என்று பதிவிட்டுள்ளார். இத்துடன் வீடியோ ஒன்றையும் அந்த பதிவுடன் இணைத்து சுப்பிரமணிய சுவாமி பகிர்ந்துள்ளார்.
அங்கிருந்து சென்ற யோகி: அந்த வீடியோவில், பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில், மோடி மேடையில் அமர்ந்து இருக்கிறார். அப்போது அங்கே வரும் யோகி ஆதித்யநாத்தை மோடி கையை பிடித்து ஏதோ சொல்வது போல இருக்கிறது. உடனே யோகி ஆதித்யநாத்தும் அங்கிருந்து நகர்ந்து செல்வது போல உள்ளது. இந்த வீடியோவைத்தான் பகிர்ந்து சுப்ரமணிய சுவாமி மேற்கண்டவாறு சாடியுள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இப்படித்தான் மதுரையில் பேட்டி அளித்த சுப்பிரமணிய சுவாமி, "மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். இது தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி அளித்த பேட்டி விவரம்:-
மோடி வரக்கூடாது: மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவாரா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, "அவர் (மோடி) வரக்கூடாது. அவரை தோற்கடிக்க வேண்டும்" என்று கூறினார். இதைக் கேட்டு அருகே இருந்தவர்களே கூட ஒரு நொடி ஷாக் ஆனார்கள். தொடர்ந்து தமிழகத்தில் இந்த முறை திமுக vs அதிமுக vs பாஜக என்று மும்முனை போட்டியா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "வேட்பாளர்களை யார் வேண்டுமானாலும் நிற்க வைக்கலாம்.
பணத்தைக் கொடுத்து விளம்பரம் கூடச் செய்யலாம். ஆனால் மக்கள் நம்பி ஏற்றுக் கொள்கிறார்களா.. இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது. நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். தேசியளவில் பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை எளிதாகக் கிடைக்கலாம். ஆனால் மோடி வரக்கூடாது. ஏனென்றால் ஏற்கனவே மோடி இரண்டு முறை பிரதமராக இருந்துவிட்டார்.
விளம்பரம் தான்: எதைச் செய்ய வேண்டுமோ அதை அவர் செய்யவில்லை. சீனா நமது நாட்டில் புகுந்து 4000 சதுர கிமீ நிலத்தை எடுத்துள்ளனர். அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அவர் எதையும் செய்யவில்லை. விளம்பரத்தில் தான் அதைச் செய்துவிட்டோம் இதைச் செய்துவிட்டோம் என்கிறார்கள். ஆனால், உண்மையில் எதுவுமே இல்லை. மாலத்தீவு போன்ற சிறு நாடுகள் கூட நமது வீரர்களை வெளியே அனுப்பிவிட்டனர்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications