சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை.. தனிப்பட்ட விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கொடுத்த பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதும், ஜெயலலிதா வாழ்ந்த கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளையும்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை. தனிப்பட்ட விவகாரம் தொடர்பான கொலைகளுக்கும், சட்ட ஒழுங்கிற்கும் சம்பந்தம் இல்லை" என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று விஷச் சாராயம் குடித்து 69 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, பாமக வழக்கறிஞர் கே பாலு, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ வால்பாறை டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

dmk edappadi palaniswami tamil nadu

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று, கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலி தொடர்பான இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸார் உடனடியாக சிபிஐ அதிகாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும். அதன்பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்களுக்கு உரிய நீதிவேண்டியும், சிபிஐ விசாரணை கோரியும் தொடர்ந்து சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத் தளங்களிலும் போராடிய முதன்மையான இயக்கம் அதிமுக. நமது தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக, அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

கள்ளச் சாராய மரணங்கள் குறித்து மடியில் கனமில்லை என்றால் திமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது. சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள்.

2016 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் திருப்பூர் அருகே ரூபாய் 570 கோடி கன்டெய்னர் லாரி பிடிபட்டது. அப்போது அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சிபிஐ விசாரணை வேண்டுமென உத்தரவு கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கி இருக்கிறதா என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கவேண்டும்.

தூத்துக்குடியில் நடைபெற்றது சட்டம் ஒழுங்கு பிரச்னையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடைசி காலத்தில் வாழ்ந்தது கொடநாட்டில்தான். அங்கு நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவங்கள் அதிமுக ஆட்சியில்தான் நடைபெற்றது.

அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடைசி காலத்தில் வாழ்ந்த கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளையும்தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை. தனிப்பட்ட விவகாரம் தொடர்பான கொலைகளுக்கும், சட்ட ஒழுங்கிற்கும் சம்பந்தம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+