அடுத்தவர்களுக்கு சேவை செய்யவே இந்த வாழ்வு.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
சென்னை: இந்த வாழ்வு அடுத்தவர்களுக்கு சேவை செய்யவே என தமிழ்நாடு ஆளுநர் ரவி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் அவ்வப்போது வெடித்து வருகின்றன. தமிழக அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதால் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழ்க அரசு. இந்த வழக்கில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே, திமுகவின் கொள்கைகள் குறித்து அவ்வப்போது மறைமுகமாக விமர்சித்து ஆளுநர் ரவி பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனினும், தொடர்ந்து, திராவிடம் குறித்தும், சனாதனம் குறித்தும் பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார் ஆளுநர் என்.ரவி.
இந்நிலையில், பகவான் மகாவீர் அறக்கட்டளை என்ற தனியார் அமைப்பு சார்பில் 26வது மகாவீர் விருதுகள் வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. மகாவீர் அறக்கட்டளை சார்பில் டெல்லியை தலைமையிடமாக கொண்ட தியான் அறக்கட்டளை, பழங்குடி சமூகத்தின் நண்பர்கள் உள்ளிட்ட நான்கு அறக்கட்டளைகளுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் விருதுகளை ஆளுநர் வழங்கினார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.ரவி, "பகவான் மகாவீர் அறக்கட்டளைக்கும், விருது பெற்றவர்களுக்கும் பாராட்டுக்கள். விலங்குகளுக்கு உணவளிப்பது என்பது நல்ல விஷயம். மேலும் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்ட கால்நடைகளை மீட்டு அவற்றுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட சேவைகள் சிறந்தவை. நீங்கள் இந்த சமூகத்துக்கு நல்ல சேவையை வழங்கி வருகிறீர்கள்.
இந்த சமூகத்தில் உதவுவது என்பது நம் கலாச்சாரத்திலேயே உள்ளது. மக்களுக்கு தேவையான முழுமையான உதவிகளை அரசு மட்டுமே வழங்க இயலாது. சனாதான தியாந்தாவில் அனைவரும் ஒன்று. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர். நாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வள்ளலாரின் 200-வது பிறந்த நாளை கொண்டாடினோம். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என வள்ளலார் கூறிய வரிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இன்றைய உலகம் பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடக்கிறது. இந்த உலகில் நாம் அனைவரும் ஒன்று என்பதை வெளிக்காட்டும் வகையில் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாடு வெளிக்காட்டியது. வசுதேவ குடும்பம் , உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற பெயரில் நடைபெற்றது. இதில் மனிதர்கள் மட்டும் இன்றி விலங்குகள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் அடங்கும். இந்த வாழ்வு அடுத்தவர்களுக்கு சேவை செய்யவே." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications