உதய்பூர் டெய்லர் படுகொலை- சனாதனிகள் விரித்த சதிவலையில் சிக்கிய கொடுஞ்செயலே.. தொல். திருமாவளவன்
சென்னை: உதய்பூரில் இந்து டெய்லர் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் என்பது சனாதனிகள் விரித்த சதிவலையில் சிக்கிய கொடுஞ்செயலே என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.
Recommended Video
இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா அவதூறாக பேசியிருந்தார். இந்த விவகாரம் சர்வதேச பிரச்சனையானது. இதனால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் நுபுர் சர்மா. அவருக்கு ஆதரவாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த டெய்லர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

என்.ஐ.ஏ.விசாரணை
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லரை கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர் இஸ்லாமிய இளைஞர்கள். அத்துடன் இந்த படுகொலையை நியாப்படுத்தி வீடியோவும் வெளியிட்டனர். இது நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து அந்த இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ.விசாரணை நடைபெற்று வருகிறது.

கடும் கண்டனத்துக்குரியது
இச்சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை எதிர்வினை பயங்கரவாதக் கொடுங்குற்றமாகும். அதிதீவிர சனாதன பயங்கரவாதிகளின் வெறுப்பு அரசியலில் சிக்கிய ஒரு அப்பாவியை மதத்தின் பெயரால் இவ்வாறு படுகொலை செயதிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை இஸ்லாமியச் சமூகம் ஒருபோதும் ஏற்காது என்பதை அறிவோம்.

சீண்டிவிட்ட செயல்
நுபுர் சர்மாவும் சனாதன பயங்கரவாத அரசியலின் விளைச்சல் தான்தான். எனவே அழித்தொழிக்கப்பட வேண்டியது நபர்களல்ல; வெறுப்பை விதைக்கும் பயங்கரவாத கோட்பாடே ஆகும். நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்துவது என்பது இஸ்லாமியச் சமூகத்தைச் சீண்டி வம்பிழுக்கும் திட்டமிட்ட சதிச் செயலே ஆகும். இஸ்லாமியர்களை வீதிக்கு இழுப்பதன் மூலம் எதிர்வினையாக இந்துக்களை ஒருங்கே திரட்டுவது தான் அவர்களின் நோக்கமாகும். இந்தியர்களை இந்துக்கள் × இஸ்லாமியர் என பிளவுப்படுத்துவதும் அதன்வழி இந்துப் பெரும்பான்மைவாதத்தை நிலைநாட்டுவதும் தான் சனாதனிகளின் சதி திட்டமாகும்.

சனாதனிகள் சதி
இதனைப் புரிந்துகொள்ளத் தவறினால் அறிந்தோ அறியாமலோ அவர்களின் சதி நோக்கங்களுக்குத் துணை போவதாக அமையும். உதய்ப்பூர் படுகொலை சனாதனிகள் விரித்த சதிவலையில் சிக்கிய கொடுஞ்செயலே ஆகும். இது இஸ்லாமியரோடு சனநாயக சக்திகள் அணிதிரளுவதைத் தடுத்திட வழிவகுக்கும்.
எனவே, இதனைப் புரிந்து கொள்வதுடன், இன்றைய சூழலில் பாஜக-வையும் சங்பரிவார்களையும் தனிமைப்படுத்த வேண்டியது தவிர்க்கமுடியாத ஒரு தேவையாக உள்ளது என்பதை இந்திய இஸ்லாமியச் சமூகம் தெளிவாக உணர்ந்து கொண்டு மிகவும் கவனமாக செயல்பட வேண்டுமென்பதையும் விசிக சுட்டிக் காட்ட விரும்புகிறது. இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications