தூத்துக்குடி துள்ளுது.. ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணுவின் பெயர்.. முதல்வர் சர்ப்ரைஸ்
சென்னை: அமைதியாக, ஆழமாக, அடக்கமாக சிந்தித்து இயங்கக்கூடியவர் நல்லகண்ணு. சமூக நீதியை நிலைநாட்டும் திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்கிக்கொண்டிருப்பவர் , என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணுவின் பெயர் சூட்டி அறிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அன்பளிப்பு: நல்லகண்ணுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்ததுடன், திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்... இதைத்தொடர்ந்து நல்லுகண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழாவில், முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி உரையாற்றினார்.
முதல்வர் பேசும்போது, "பொதுவுடைமை இயக்கத்திற்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததாக நம்மை பொறுத்தவரை யாரும் கருதி விட முடியாது. தோழர் நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை. வாழ்த்து பெற வந்துள்ளேன்.
உறுதுணை: திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றிக்கொண்டிருக்கக்கூடிய திட்டங்களுக்கெல்லாம் உறுதுணையாக பக்கபலமாக விளங்கிக்கொண்டிருப்பவர் அய்யா நல்லகண்ணு. எதையும் அடக்கமாக, ஆழமாக சிந்தித்து வெளிப்படுத்தும் ஐயா நல்லகண்ணுவை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என அய்யா நல்லகண்ணுவை கேட்டுக் கொள்கிறேன்" என்று புகழாரம் சூட்டினார்.
மருத்துவமனை: இந்நிலையில், திருவைகுண்டம் மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டியிருக்கிறார்.. இது தூத்துக்குடி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
ஸ்ரீவைகுண்டத்துக்கும் நல்லகண்ணுவுக்கும் நிறைய நெருங்கிய தொடர்பு உள்ளது.. பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போதைய தூத்துக்குடி மாவட்டம்), இந்த ஸ்ரீவைகுண்டம் நகரில் பிறந்தவர்தான் நல்லகண்ணு.. இதே ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளித்தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்தான் நல்லக்கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள்.
பஞ்சம், பசி: நல்லகண்ணுவுக்கு 15 வயது இருக்கும்போதே, இடதுசாரி இயக்க செயல்பாடுகளில் தீவிர ஆர்வத்துடன் இருந்தார்.. அப்போது, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மிகப்பெரிய பஞ்சமும் பசியும் நிலவியது.. இந்த பஞ்சம் காலகட்டங்களில், 2000 நெல் மூட்டைகளை ஒருவர் பதுக்கி வைத்திருந்ததை கேள்விப்பட்ட நல்லகண்ணு, "ஜனசக்தி" என்ற பத்திரிகையில் எழுதி, கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அரசு இயந்திரம் உடனடி நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்தவர்.
அதேபோல, நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பட்டியல் இன மக்களின் வாழ்வினை மேம்படுத்தி ஏராளமான போராட்டங்களையும் முன்னெடுத்தவர்.. அந்த வலிய போராட்டங்களில் பல வெற்றியையும் பெற்றுத்தந்தவர்.
ஸ்ரீவைகுண்டம்: ஒருமுறை, ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி மேற்கொள்வதுடன் மணல் கொள்ளை நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றம் வரை சென்றிருந்தார் நல்லகண்ணு.. இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாரும் வழக்கில், 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தபோது, அதில் ஒருவராக நல்லகண்ணுவையும் குழுவில் நியமித்திருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில்தான், இன்று திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர் சூட்ட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்... திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, நல்லகண்ணுவின் பெயரை சூட்ட முதல்வர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
சிறப்பு - மகிழ்ச்சி: 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இன்றுவரை இயங்கி வரும் பெருமைக்கு உரியவரான நல்லகண்ணுவுக்கு, அரசு வழங்கியிருக்கும் இந்த கவுரவமும், சிறப்பும், நிறைந்த மகிழ்வையும், நெகிழ்வையும் மாநில மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications