"கண் அசைவிற்காக வெயிட்டிங்".. தோப்புவிற்கு திமுக தந்த அசைன்மென்ட்.. இவரை வைத்து "அவரை" தூக்க திட்டம்
சென்னை: திமுகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் மூலமாக இன்னொரு அதிமுக புள்ளியும் விரைவில் திமுகவிற்கு தாவ இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதிமுகவில் ஒரு காலத்தில் சீனியர் அமைச்சர்களில் ஒருவராக தோப்பு வெங்கடாச்சலம் இருந்தார். 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெருந்துறை தொகுதியில் வெற்றிபெற்ற அவர், அமைச்சராக இருந்தார். ஆனால் 2021 சட்டசபை தேர்தலில் இவருக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை.
இபிஎஸ், ஓபிஎஸ் என்று இரண்டு தரப்பிற்கும் இவர் நெருக்கமாக இல்லை. இரண்டு பேரின் குட்புக்கிலும் இவர் இல்லை என்பதால் அந்த தேர்தலில் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவே இல்லை.
வாய்ப்பு
இதனால் கட்சிக்கு எதிராக வெளிப்படையாக தோப்பு வெங்கடாச்சலம் பேட்டி கொடுத்தார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார். அதோடு அதிமுக வேட்பாளருக்கு எதிராகவே பெருந்துறையில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். இதையடுத்து கட்சியில் இருந்தும் தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்டார்.
நீக்கம்
அதிமுகவில் ஓரம்கட்டப்பட்ட நிலையில்தான் தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் இணைந்தார். கடந்த வாரம் தனது தொண்டர்கள், ஆதரவாளர்களோடு தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் இணைந்தார். அப்போதே இவர் இன்னும் சில அதிமுக தலைகளை திமுக பக்கம் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் மிக முக்கியமான கொங்கு மாவட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவர் திமுக பக்கம் வருவதற்கு தோப்பு வெங்கடாச்சலம் மூலம் தூதுவிட்டுக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதிமுக
அதிமுகவில் தலைவர்களுக்கு இடையில் மோதல் உள்ளது. இரண்டு தலைவர்களும் மாறி மாறி மோதுவதால் கட்சியில் எதிர்காலம் இல்லை. சசிகலாவும் கட்சிக்குள் வரும் திட்டத்தில் இருக்கிறார், இதனால் திமுகவில் இணைவதே நல்லது என்று அந்த மூத்த அதிமுக நிர்வாகி கருதுகிறாராம். தோப்பு வெங்கடாச்சலம் மூலம் இதற்காக முயன்று வருகிறார். தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவில் இருந்த போது அவருடன் இந்த அதிமுக புள்ளி நெருக்கமாக இருந்தார். தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்ட பின்பும் கூட அவருடன் நட்பாகவே இருந்துள்ளார்.
இணைகிறார்
இந்த நிலையில்தான் தோப்பு வெங்கடாச்சலத்தைப் பயன்படுத்தி அதிமுகவில் இருந்து அந்த புள்ளி திமுகவிற்கு விரைவில் தாவ தீவிரமாக முயன்று வருகிறார் என்கிறார்கள். ஏற்கனவே ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் இருந்து 40 ஆயிரம் அதிமுக நிர்வாகிகளை திமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என்ற அசைண்மென்ட் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
இணைப்பு
விரைவில் இதற்கான முன்னெடுப்புகளும் நடக்கும் என்கிறார்கள். அதன்படி தோப்பு வெங்கடாச்சலம் என்ற ஒற்றை கல் மூலம் முன்னாள் அதிமுக அமைச்சர், நிர்வாகிகள் என்று பல மாங்காய்களை ஒரே நேரத்தில் அடிக்கும் திட்டத்தில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதை தோப்பு வெங்கடாச்சலமும் வெளிப்படையாகவே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார், நான் திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி.
கண் அசைவு
திமுக தலைமையின் கண் அசைவிற்காக காத்து இருக்கிறேன். தலைவர் அனுமதியும், ஒரு மாதம் அவகாசமும் கொடுத்தால் போதும். அதிமுகவில் இருந்து மொத்தமாக பலரை திமுக பக்கம் கொண்டு வருவேன் என்று தோப்பு வெங்கடாச்சலம் வெளிப்படையாக குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது போலவே விரைவில் அந்த முக்கிய அதிமுக புள்ளியும், சில ஆயிரம் அதிமுக நிர்வாகிகளும் திமுகவில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.