ஏராளமான தங்கம், பணம்.. விக்ரம் பிரபுவின் உறவினர் வீட்டில்.. வேலைக்கார பெண் ஐடியாவால் ட்விஸ்ட்
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிப்பவர் இந்திரஜித். தொழில் அதிபரான இவர், நடிகர் விக்ரம் பிரபுவின் நெருங்கிய உறவினர் ஆவார். இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதியன்று பகலில் இரண்டு நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் முகமூடி அணிந்து வந்துள்ளனர். அவர்கள் வீட்டில் ஆட்கள் உள்ளதை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையர்களை கைது செய்தனர். வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் கூறிய ஆசை வார்த்தைகளால் திருட வந்து சிக்கியதாக வாக்குமூலம் தந்துள்ளனர்.
பணக்கார வீடுகளில் சிலர் திருடுவதற்கு திட்டமிடுகிறார்கள்.குறிப்பாக நடிகர், நடிகைகள்,தொழில் அதிபர்களின் வீடுகளில் அதிக பணம் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் சிலர் திட்டமிட்டு திருடுகிறார்கள். சிலருக்கு அங்கு வேலை செய்யும் சில வேலைக்கார பெண்கள் உதவி செய்வதும் உண்டு.அப்படியான சம்பவங்கள் அண்மை காலங்களில் நடந்துள்ளது. அந்த வகையில் தான் நடிகர் விக்ரம் பிரபுவின் உறவினரான தொழில் அதிபர் வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எப்படி சிக்கினார்கள் என்பதை பார்ப்போம்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 1-வது மெயின்ரோட்டில் இந்திரஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழில் அதிபர் ஆவார். இந்திரஜித் யார் என்றால் நடிகர் விக்ரம் பிரபுவின் நெருங்கிய உறவினர் ஆவார். இவரது வீட்டிற்குள் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதியன்று பகலில் 2 மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்தனர். அவர்கள் அப்போது முகமூடி அணிந்து இருந்தனர்.
முகமூடி அணிந்த திருடர்களை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள், நீங்கள் யாரென்று? என கேட்டு கூச்சல் போட்டிருக்கிறார்கள். உடனே அவர்கள் இருவரும் மீண்டும் மதில் சுவர் ஏறி தப்பி ஓடிவிட்டார்கள். வந்தவர்கள் திருடர்கள் என்பதை அறிந்த வீட்டில் உள்ளவர்கள், உடனே அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் வீட்டில் புகுந்த முகமூடி ஆசாமிகள் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களின் பெயர் ராபர்ட், வினோத்குமார் என்பதும், கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
போலீசாரிடம் ராபர்ட், வினோத்குமார் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், தொழிலதிபர் இந்திரஜித் வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் ஒருவர் மூலமாக வீட்டில் நிறைய பணமும், நகைகளும் இருப்பது எங்களுக்கு தெரிந்தது. எனவே அந்த பணம், நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வீட்டுக்குள் சென்றோம். ஆனால் வீட்டில் ஆண்கள் இருந்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பி வந்துவிட்டோம். இதற்கு முன்பு நாங்கள் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. இதனால் எங்களுக்கு போதிய அனுபவம் இல்லை. இதன் காரணமாக கொள்ளை முயற்சி தோல்வியை சந்தித்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications