ஊரக உள்ளாட்சி... வெற்றிபெற்றவர்கள் நாளை பதவியேற்கின்றனர்
சென்னை: தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் நாளை பதவியேற்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் ஊராட்சி, ஒன்றிய, மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகின்றன. நாளை காலை 10 மணிக்கு பதவியேற்றுக்கொள்ளும் நிகழ்வு தொடங்குகிறது.
கடந்த 27-ம் தேதி மற்றும் 30-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

தேர்தல்
கிராம வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு வாக்குச்சீட்டு மூலம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளும் முழுமையாக வெளியிடப்பட்டு விட்டதால் பதவியேர்பு வைபங்கள் நாளை நடக்க உள்ளன.

காலை 10
வெற்றி பெற்ற பிரதிநிதிகள் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்கின்றனர். ஊராட்சி அலுவலகம், ஒன்றியம் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பதவியேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஊராட்சி உறுப்பினர், தலைவர் ஊராட்சி அலுவலகங்களிலும், ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றிய அலுவலத்திலும், மாவட்ட கவுன்சிலர்கள் ஆட்சியர் அலுவலகங்களிலும் பதவியேற்கின்றனர்.

11-ம் தேதி
இதனிடையே ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கு வரும் 11-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. மறைமுகத் தேர்தலில் வெற்றிபெற இப்போதே ஆட்களை இழுக்கும் பணி துவங்கியுள்ளது.

தலைவலி
இதுவரை எதிர் எதிர் துருவங்களுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டி இப்போது உள்போட்டியாக மாறியுள்ளதால் வெற்றி பெற்ற கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. யாரை ஆதரிப்பது, யாரை விடுவது என்பது தெரியாமல் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications