மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பு! காலை உணவு திட்டம் செய்த மேஜிக்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டம் என்பது மருத்துவமனைக்கு குழந்தைகள் செல்வதையும் தீவிர நோய் பாதிப்புகளையும் கணிசமாக குறைத்துள்ளது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காலை உணவு திட்டம் தொடர்பாக பிரபல ஆங்கில செய்தி இணையதளமான பிரிண்ட் வெளியிட்டிருந்த செய்தியை மேற்கோள் காட்டி ஸ்டாலின் பெருமிதத்தோடு இதனை தெரிவித்துள்ளார்.
காலை உணவு திட்டத்தால் மருத்துவமனைக்கு செல்வது குறைந்துள்ளது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். காலை உணவு திட்டம் தொடர்பாக பிரபல ஆங்கில செய்தி இணையதளமான பிரிண்ட் வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள் காட்டியிருக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்டாலின் பெருமிதத்துடன் போட்ட பதிவு
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாதவது:- சிந்தித்து திட்டமிடுவது என்பது உடனடி பிரச்சினைகளை தீர்ப்பது மட்டும் கிடையாது. நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு சமூகத்தை மாற்றுவதுதான். முதல்வரின் காலை உணவுத் திட்டம் என்பது மருத்துவமனைக்கு குழந்தைகள் செல்வதையும் தீவிர நோய் பாதிப்புகளையும் கணிசமாக குறைத்துள்ளது.
குழந்தைகளிடையே, கவனம், நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது. நன்கு ஊட்டசத்து அளிக்கப்பட்ட குழந்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்டு நீண்ட கால சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. கல்வி வாயிலாக தமிழ்நாடு பெண்களுக்கு அதிகாரம் அளித்து, பாலின இடைவெளியை குறைந்துள்ளது. தொலைநோக்குடன் பயனளிக்ககூடிய திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
வருகை விகிதம் அதிகரிப்பு
முன்னதாக பிரிண்ட் வெளியிட்ட செய்தியில் காலை உணவு திட்டத்தினால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் உள்ளிட்டவைகள் குறித்த அறிக்கை ஒன்று வெளியாகியிருந்தது. அதில், "கிராமப்புற துவக்க பள்ளியில் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்வது 68.4 சதவிகிதம் குறைந்துள்ளது. நகர்ப்பகுதிகளில் 29.4 சதவிகிதம் குறைந்துள்ளது. உடல் நல அளவு மட்டும் இன்றி மாணவர்கள் பள்ளி வகுப்பறைகளுக்கு வருகை விகிதம் அதிகரித்து இருப்பதையும் தமிழ்நாடு மாநில திட்ட கமிஷன் வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
89.6 இல் இருந்து 95.4 ஆக உயர்ந்துள்ளது
நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 5,300 மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், மாணவர்களிடையே, கவனம் செலுத்துதல் மற்றும் புரிதலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மாணவர்களின் கவனிப்புத்திறன் என்பது 85.8 சதவிகிதத்தில் இருந்து 93.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றும் திறனும் 91.3 சதவிகிதத்தில் இருந்து 95.5 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் ஆசிரியர்கள் அளிக்கும் எழுத்து அசைன்மண்ட் பணிகளை முடித்து வரும் அளவும் அதிகரித்துள்ளது. 89.6 சதவிகிதத்தில் இருந்து 95.4 ஆக உயர்ந்துள்ளது என்பது உள்ளிட்ட மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆரோக்கியம் காலை உணவு திட்டத்தால் எவ்வாறு மேம்பட்டுள்ளது என்பது குறித்த திட்ட கமிஷன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்துதான் முதல்வர் பெருமிதத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காலை உணவுத் திட்டம்
முதல்வரின் காலை உணவு திட்டம் என்பது கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள 1,545 துவக்க பள்ளிகளில் தொடங்கப்பட்டது. இதில், 1.14 லட்சம் மாணவ - மாணவிகள் பயன்பெற்றனர். பின்னர் இந்த திட்டம் அனைத்து அரசு துவக்கப் பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 2023-ல் விரிவுபடுத்தப்பட்டது. இதனால், நகர்புறம் கிராமம் என தமிழகம் முழுக்க உள்ள 31,008- பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள 17 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெற்றனர். இதற்காக ஆண்டு பட்ஜெட் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications