சென்னை கடல் பகுதிகளில் உற்சாகம்.. கிரேனில் தூக்கி படகில் ஏற்றி கடலில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம், காசிமேட்டில் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. ராட்சத கிரேன்கள் மூலம் விநாயகர் சிலைகள் படகில் ஏற்றப்பட்டு கடலில் கொண்டு சென்று கரைக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கான அனுமதி இன்றுடன் முடிவடையும் நிலையில் ஆயிரக்கணக்கான சிலைகள் இன்று கரைக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். சென்னையில் மட்டும் 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் 1,519 சிலைகள் பெரிய அளவிலான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

விநாயகர் சதுர்த்தி முடிந்து சென்னையில் செப்டம்பர் 15-ம் தேதி அதாவது இன்று வரை சிலைகளை கடலில் கரைப்பதற்காக போலீஸார் அனுமதி வழங்கியிருந்தனர். குறிப்பாக, செப்டம்பர் 11, 14, 15-ம் தேதிகளில் பெரிய அளவிலான சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமையான நேற்று பல பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் சென்னை கடற்கரைகளுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கரைப்பட்டது. குறிப்பாக, பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், 2 சிறிய அளவிலான கிரேன் வாகனங்களும் கூடுதலாக நிறுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனங்கள், தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள் என சிலைகளை கரைப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும், சிலைகளை சாலையில் இருந்து கடற்பரப்பு வழியாக கிரேன் இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல, சுமார் 50 அடி நீளமுள்ள டிராலி அமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கோபுரங்கள், காவல் கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்பு கேமராக்கள், சிலைகள் கடலில் கரைப்பதை பார்க்க வரும் பொதுமக்களை ஒழுங்குப்படுத்த தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. இன்று சுமார் 1200 சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சிலைகளை கிரேன் மூலமாக கடலுக்கு எடுத்து சென்று, கடலுக்குள் தன்னார்வலர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது.
சிலைகளை கடலுக்கு கொண்டு வருவதற்கு முன்பு, சிலையில் இருக்கும் மாலைகள், துணி உள்ளிட்ட பொருட்களை எடுத்துவிட்டு பின்னர் சிலைகளை கடலில் கரைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக மாநகராட்சி ஊழியர்களால் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
இன்று காலை 7 மணி முதல் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து, ஒவ்வொரு கடற்கரை பகுதிகளுக்கும் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட இருக்கின்றன. இதனால், பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட 4 கடற்கரை பகுதிகளிலும் போலீசார் சில போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications