தமிழகத்தை வறுத்தெடுக்கும் வெயில்.. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் முற்றிலும் வறண்டதால் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வெளுத்தெடுத்து வரும் கோடை வெயில், சற்றும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தமிழகத்தில் சிறிதும், பெரிதுமாக உள்ள சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு விட்டதாக தெரிகிறது.
நாடு முழுவதுமே கோடை வெயில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவழை போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் முக்கிய நீர் ஆதாரங்கள் அனைத்துமே வறண்டும், பாளம் பாளமாக வெடித்தும் காணப்படுகின்றன.

இதன் காரணமாக நிலத்தடி நீர் உபயோகம் அதிகமானதால், 26-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டமும் அதிபயங்கரமாக குறைந்துள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட மிக குறைவாகவே பெய்தது.
இதனால் மாநிலத்தில் உள்ள அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் சொல்லிக் கொள்ளும்படி உயரவில்லை. இதனால் அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலையில், குடிநீருக்கு மட்டுமே விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டது.
தற்போது குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் மேட்டூர், அமராவதி, பெரியாறு, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பெருஞ்சாணி, சாத்தனூர் உட்பட பல முக்கிய அணைகளின் நீர் மட்டம் வறண்டு கொண்டே வருகிறது. இது பற்றி தகவல் தெரிவித்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள 14,098 ஏரிகளில் 10,080 ஏரிகள் முற்றிலுமாக வறண்டு விட்டதாக கூறி அதிர வைத்துள்ளனர். மேலும் மீதுமுள்ள ஏரிகளில் 30 முதல் 40 சதவீதத்திற்கும் குறைவான அளவே தண்ணீர் தற்போது உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்
மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளில் உள்ள மொத்த தண்ணீர் அளவை கணக்கிட்டால், 25 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு, நிலத்தடி நீரை கடந்த சில மாதங்களாக அதிகம் பயன்படுத்தி வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே போகிறதாம். கடந்த ஜனவரி முதல் நிலத்தடி நீர் பயன்பாடு மிகமிக அதிகமாக உள்ளதால் 1 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை நீர்மட்டம் சரிந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவாரூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, உள்ளிட்ட 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications