சென்னை, கோவையில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அலற விட்ட இ-மெயில்.. உச்சகட்ட பதற்றம்!
சென்னை: சென்னை போரூர் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் புகாரை அடுத்து பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, கோவையிலும் ஒரு பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சென்னை போரூர் அடுத்த மாங்காடு செருகம்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.பி.பி மில்லினியம் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம், உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனே சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்களோடு விரைந்து வந்த மாங்காடு போலீசார், பள்ளி வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயழிலப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும், கோவை வடவள்ளி அடுத்த சோமயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில் வடவள்ளி போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை சோமையம்பாளையம் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் பரவிய நிலையில், பதறிப்போய் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பெற்றோர்கள் பள்ளி முன்பாக திரண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யாரென இதுவரை கண்டறியப்படாத நிலையில், மீண்டும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications