பரபரத்த சைதாப்பேட்டை.. அரிவாளுடன் பாய்ந்த ரவுடிகள்! மண்டைல ஓங்கி தட்டி.. மடக்கி பிடித்த பெண் போலீஸ்
சென்னை: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கைதி ஒருவரை ஆஜர்படுத்த சென்ற போது அவரை கொலை செய்வதற்காக பாய்ந்து வந்த ரவுடிகளை மடக்கிப் பிடித்த பெண் போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பட்டப்பகில் நடந்திருக்கும் இந்த கொலை முயற்சி சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் உதவி ஆணையர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆரம்பித்து வைத்த மதுரை பாலா
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலா. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் ஆகிய வழக்குகள் பதிவாகி உள்ளன. மதுரையில் தனது ரவுடியிஸத்தை காட்டி வந்த பாலா கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் இருக்கும் சில ரவுடிகளுடன் சேர்ந்து கொலை, கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு தென் சென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சிவக்குமார் என்ற ரவுடியை பாலாவின் கூட்டாளிகள் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கு தொடர்பாக பாலாவை போலீஸார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

பாலாவை குறிவைத்து பாய்ந்த ரவுடிகள்
இந்நிலையில், வேலூர் சிறையில் இருந்த பாலாவை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் அவரை வேனில் அழைத்து வந்தனர். அப்போது வேனில் இருந்து பாலா இறங்கியதும் நீதிமன்ற வளாகத்தில் பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பாலாவை கொலை செய்ய பாய்ந்து வந்தது. இதனை பார்த்த போலீஸார் பாலாவை சுற்றி வளைத்து பாதுகாத்ததுடன் வெட்ட வந்த ரவுடிகளை பிடிக்க முயன்றனர்.

மடக்கி பிடித்த பெண் போலீஸார்
போலீஸார் உஷாரானதால் ஏமாந்த அந்த கும்பல், மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடினர். அந்த சமயத்தில், நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸார் ராஜலட்சுமி, சசிகலா, கிருஷ்ணவேனி ஆகியோர் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். எனினும், அந்த கும்பலைச் சேர்ந்த இருவர் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். இதையடுத்து, மற்ற மூவரும் பெண் போலீஸாரை நோக்கி அரிவாளை ஓங்கியபடி வந்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட பெண் காவலர் ஒருவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை திருப்பி பிடித்து ரவுடி ஒருவரின் தலையில் தாக்கினார். இதில் மண்டை உடைந்து அவர் கீழே விழுந்தார். இதனை பார்த்த மற்ற இரண்டு ரவுடிகள் செய்வதறியாது திகைத்து நிற்கவே பெண் போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

மாமூல் தகராறு
இதையடுத்து, அந்த மூவரும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில், அவர்கள் சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த சக்திவேல் (22), அப்துல் (23), அருண் (25) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அதாவது, சென்னை அமைந்தகரையில் ரவுடிகளாக இருக்கும் அப்பாஸ் மற்றும் ரோஹித் ஆகியோர் இடையே மாமூல் வசூலிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரவுடி ரோஹித்துக்கு மதுரை பாலா ஆதரவாக இருந்துள்ளார்.

தீர்த்துக்கட்ட முடிவு
இதனால் பாலா மீது ஆத்திரத்தில் இருந்த ரவுடி அப்பாஸ், அவரை தீர்த்துகட்ட தக்க நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். அந்த சமயத்தில்தான், மதுரை பாலா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவது அப்பாஸுக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தன்னுடன் மேலும் நான்கு பேரை சேர்த்துக் கொண்டு பாலாவை நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்ய அப்பாஸ் வந்திருப்பது தெரியவந்தது.

கைது நடவடிக்கை
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த மூவரையும் கைது செய்த போலீஸார், தலைமறைவாகி உள்ள அப்பாஸ் உள்ளிட்ட இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் கைதியை கொலை செய்ய வந்த ரவுடிகளை மடக்கி பிடித்த பெண் போலீஸாருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications