ஆணவம்.. நோ பார்க்கிங்கில் காரை நிறுத்த கூடாது என்ற காவலரை.. தாக்கிய பெண்கள் உட்பட மூவர் அதிரடி கைது
சென்னை: மாமல்லபுரம் அருகே நேற்று காவலாளியை சரமாரியாக தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நோ பார்க்கிங்கில் காரை நிறுத்த வேண்டாம் என கூறிய அந்த காவலர் மீது கொடூரமாக தாக்கிய அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்த நிலையில், பிரபுதாஸ், சண்முகப்பிரியா, கீர்த்தனா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் பொது இடங்களில், பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர், தனியார் காவலாளிகளை அவதூறாக பேசுவதும், தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் எம்பி ஒருவரின் பிஏ எனக்கூறி காவலர்களுடன் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சென்னை லூப் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் துணை முதலமைச்சரை வரச் சொல்லவா என காவல்துறையினரை கெட்ட வார்த்தைகளை கொண்டு அர்ச்சனை பாடிய நபரும் பெண்ணும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தக்கூடாது என காவலர் ஒருவர் கூற, அவரை நான்கு பேர் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாமல்லபுரம் ஐந்து ரதம் அருகே நேற்று காவலாளி ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு காரில் இருந்த இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் காரை நோ பார்க்கிங்கில் நிறுத்த முயன்றனர்.
அப்போது அந்த காவலர் அவர்களை இங்கே காரை நிறுத்தக்கூடாது என கூறியதால் ஆத்திரம் அடைந்த நான்கு பேரும் பேசிக் கொண்டிருக்கும் போதே காரில் இருந்து இறங்கிய பெண் ஒருவர் காவலரை கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து அவருடன் காரில் வந்தவர்களும் கீழே இறங்கி மொத்தமாக அவரை தாக்க தொடங்கினர். காவலர் மீது எந்த தவறும் இல்லாத நிலையில் அவரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
தொடர்ந்து காவலாளியை தாக்கிய கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் வீடியோ காட்சிகளை வைத்து அவர்கள் யார் என்பதை கண்டறியும் வேலையில் இறங்கினர். தொடர்ந்து தனிப்படை அமைத்தும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் காவலரை தாக்கியது சென்னையைச் சேர்ந்த பிரபுதாஸ், சண்முகப்பிரியா, கீர்த்தனா ஆகியோர் என்பதும் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. முடிச்சூரை சேர்ந்த அவர்களை கைது செய்யதுள்ள போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட இன்னும் ஒருவரை தேடி வருகின்றனர். தற்போது மூவர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் பொதுமக்களும் காவல் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications