தேமுதிக செய்த "அந்த" 3 தப்பு.. ஜெயலலிதாவையே ஆட்டுவித்தவரா விஜயகாந்த்.. சீமான் பெஸ்ட் உதாரணம்..!
தேமுதிக 3 பெரும் தவறுகளை செய்துள்ளது என்பதை மறுக்க முடியாது
சென்னை: உயிர்கள் என்றால் வளர்ச்சி இருக்கும்.. வளர்ச்சியே இல்லாவிட்டால் அது வெறும் மரக் கட்டைதான். அப்டிப்பட்ட நிலையில்தான் இன்று தேமுதிக இருக்கிறது. விஜயகாந்த் என்று பலமிழந்து போனாரோ அதன் பிறகு தேமுதிக வளரவே இல்லை.. அப்படியேதான் இருக்கிறது. மக்களிடமிருந்து மிகவும் அந்நியப்பட்டு நிற்கிறது.
யாரையெல்லாம் அது பலமாக நம்பியதோ அவர்கள் எல்லாம் அக்கட்சியை விட்டு விலகிப் போய் விட்டனர். இதுதான் உண்மை, இதை தேமுதிக தலைமை இன்னும் கூட புரிந்து கொள்ளவில்லை என்பது ஆச்சரியமானதுதான்.
தேமுதிக 3 தவறுகளை செய்துள்ளது. அக்கட்சியின் மூலதனம், பலம் எல்லாமே விஜயகாந்த்தான். கிராமப்புறங்களில் விஜயகாந்த் போன அளவுக்கு எந்தத் தலைவரும் போனதில்லை.

விஜயகாந்த்
எம்ஜிஆருக்குப் பிறகு கிராமப்புற வாக்காளர்களை அதிகம் கவர்ந்தவர் விஜயகாந்த்தான். கிராமம் கிராமமாக, வியர்க்க விறுவிறுக்க சலிப்பே இல்லாமல் போய் சல்லடை போட்டு மக்களைத் தேடிச் சேர்த்தவர் விஜயகாந்த். அந்த மக்களின் ஆதரவை இன்று தேமுதிக இழந்திருக்கிறது. இது உண்மை.

பிரேமலதா
இதற்கு முக்கியக் காரணம், விஜயகாந்த்துக்குப் பிறகு பிரேமலதாவோ அவரது மகனோ தம்பி சுதீஷோ யாருமே இப்படி கிராமகிராமமாக போய் அவர்களைச் சந்திக்கவில்லை. பிறகு எப்படி கட்சி வளரும். கிராமங்களில் இன்றும் விஜயகாந்த் மக்களின் மனதில் வாழ்கிறார். ஆனால் விஜயகாந்த் உடல் நலம் குன்றிப் போன பிறகு அவர்களின் கவலை எல்லாம் அவர் மீண்டும் நலமுடன் திரும்ப வேண்டும் என்பதில்தான் இருக்கிறதே தவிர பிரேமலதாவுக்கு ஓட்டுப்போட வேண்டும் என்ற மனம் அவர்களுக்கு வரவில்லை. வருவதும் கடினம்.. எல்லோரும் விஜயகாந்த் ஆகி விட முடியாது இல்லையா!

விஜயகாந்த்
தேமுதிக செய்த 2வது தவறு.. தங்களின் பின்புலமாக இருந்த வன்னியர் சமுதாயத்தினரை வெகுவாக இழந்ததுதான். தேமுதிக ஆரம்பித்தபோது விஜயகாந்த்துக்கு வெகுவாக கை கொடுத்தவர்கள் கவுண்டர் சமுதாயத்தினரும், வன்னியர்களும்தான். தென்னகத்து வாக்குகள் எல்லாம் அதற்குப் பிறகுதான். வன்னிய இளைஞர்கள் மத்தியில் விஜயகாந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். இது பாமகவுக்கு நன்றாகவே தெரியும்.

புத்திசாலித்தனம்
இந்த இடத்தில்தான் பாமக தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தியது. வன்னிய இளைஞர்களை மீண்டும் வசீகரிக்கும் அனைத்து வேலைகளையும் அது செய்தது. இதற்காக அன்புமணியே நேரடியாக களம் இறங்கினார். வன்னிய மக்களை நேரில் போய்ச் சந்தித்தார். பேசினார். அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். அவர் சோர்ந்து போய் உட்கார்ந்து விடவில்லை. போய்ட்டாங்களே என்று வருத்தமும் படவில்லை. மாறாக நாங்க உங்க கூடவே இருக்கோம் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மனதில் விதைத்தார்.. அதன் அறுவடையைத்தான் கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் பார்த்தது. வன்னிய இளைஞர்கள் மீண்டும் இன்று பாமக பக்கம் திரண்டு நிற்கின்றனர்.

சுதீஷ்
இந்த இடத்தில்தான் தேமுதிக கோட்டை விட்டது. எத்தனை வட மாவட்டங்களில் சுதீஷ் சுற்றுப் பயணம் செய்திருப்பார்.. பிரேமலதா போயிருப்பார்.. ஏன் விஜயகாந்த் எத்தனை கிராமங்களுக்குப் போயிருப்பார். விரல் விட்டு கூட எண்ண வேண்டியதில்லை. இதுதான் தேமுதிக செய்த பெரிய தவறு. அவர்களது அடித்தளத்தை அவர்களே இடித்துத் தள்ளி விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

நாம் தமிழர்
அடுத்த தவறு.. புதிதாக பிறந்த சக்திகளிடம் தங்களது வாக்கு வங்கியைப் பறி கொடுத்தது. அதாவது நாம் தமிழர் கட்சியின் கடும் உழைப்பை தேமுதிக சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டது. அதை புறக்கணித்தது. அலட்சியம் செய்தது. சீமான் எல்லாம் ஒரு ஆளா என்ற ரேஞ்சுக்குத்தான் அவர்கள் பார்த்தனரே தவிர அந்த சக்தியின் வீரியத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தவறினர். விளைவு, நாம் தமிழர் பக்கம் பெருமளவிலான இளைஞர்கள் போய் விட்டனர்.

கமல்
ஆனால் கமல்ஹாசன் வந்த பிறகுதான் தேமுதிகவின் கதி அதோ கதியானது என்று கூட சொல்லலாம். விஜயகாந்த்தைத்தான் தமிழக மக்கள் முதல் முறையாக புதிய மாற்று என்று கருதினர். ஒரு அலை போல வந்தவர் விஜயகாந்த். திமுக பயந்தது, அதிமுக நடுங்கியது.. இதெல்லாம் வரலாறு.. மாற்றிச் சொல்ல முடியாது. ஆனால் அந்த அலை அதே வேகத்தில் பத்தோடு பதினொன்றாக போனதுதான் காலத்தின் கோலம். அதை அடுத்து மக்கள் மாற்றாக கருதுவது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தைத்தான்.

பெரிய ஓட்டை
அவருக்கு நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றால் அதில் விஜயகாந்த்தை மாற்றாக கருதியவர்களும் அடக்கம். அந்த வகையில் தேமுதிகவின் நகர்ப்புற வாக்கு வங்கியில் கமல்ஹாசனும் தன் பங்குக்கு பெரிய ஓட்டையைப் போட்டுள்ளார். இதெல்லாம் அரசியல் கள எதார்த்தம். ஆனால் இதெல்லாம் புரியாமல் நாங்க யார் தெரியுமா.. தனித்து நின்னா என்னாகும் தெரியுமா.. ஜெயலலிதாவையே ஆட்டுவித்தவர் எங்கள் கேப்டன் என்று தேமுதிகவினர் பழைய பஞ்சாங்கத்தையே பாடிக் கொண்டிருந்தால் இருக்கும் 2 சதவீத வாக்குகளையும் நாளை வேறு யாராவது வந்து ஆட்டையைப் போட்டு விடுவார்கள் என்பதும் உண்மை.












Click it and Unblock the Notifications