கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்.. தலைமறைவாக உள்ள மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் தலைமறைவாக உள்ள மருத்துவர்களைத் தேட அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையில் கல்லூரியில் படித்து வந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தச் சம்பவத்திற்குச் சிகிச்சை அளித்த சம்மந்தப்பட்ட அரசு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்றும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கால்பந்து வீராங்கனை
சென்னையைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியா, கால் வலியால் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கொண்டார். அவர் கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இருப்பினும், அந்த வீராங்கனைக்கு வலி தொடர்ந்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மரணம்
அங்கு பிரியாவின் கால் அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக மருத்துவக் குழு நடத்திய விசாரணையில் மாணவி மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என தெரிய வந்தது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் அலட்சியத்தால் மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாமீன் கிடைக்கவில்லை
இந்தச் சம்பவம் குறித்துத் தலைமறைவாக இருக்கும் 2 மருத்துவர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இருப்பினும், நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அதேநேரம் சரணடைந்தால் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இருப்பினும், அவர்கள் இதுவரை சரணடையவில்லை.

தனிப்படைகள்
இந்தச் சூழலில் பிரியா மரண வழக்கில் தலைமறைவான மருத்துவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள 2 மருத்துவர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சோமசுந்தர், பால்ராம் சங்கர் ஆகியோரை பிடிக்கத் தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ரூ.10 லட்சம் நிதி, அரசு சார்பில் வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.












Click it and Unblock the Notifications