வேறு வழியில்லை.. தடுப்பூசி வரும்வரை கொரோனாவோடுதான் புழங்கியாகனும்.. ஜஸ்ட் 3 டிப்ஸ்.. செமையா வாழலாம்
சென்னை: ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், மற்றொரு பக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை திருப்பி எடுக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒருபடியாக, சிவப்பு மண்டலம் பகுதி உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மண்டலங்களிலும் வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.
அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடைகளும் திறந்து உள்ளன. நாளை தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுகிறது. ஆரம்பத்தில், தனித்திரு, விழித்திரு என்று கூறிவிட்டு, இப்போது பிரச்சனை அதிகரிக்கக்கூடிய நேரத்தில், இவ்வாறு மக்களை தெருக்களில் இறங்கி நடக்க வைப்பது சரிதானா என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் முன்வைக்கப்பட்டு வருவதை மறுக்க முடியாது.
ஊரடங்கு தளர்வு
இருப்பினும் வைரஸ் பாதிப்பால் ஏற்படும் பலியை விட பொருளாதார இழப்பால் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே, நமது உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பு நமது கையில்தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு மக்களும் உணர வேண்டிய தருணம். ஏனென்றால் இதற்கு மேலும் ஊரடங்கை நீட்டித்து, மக்களை வீட்டில் வைத்து சாப்பாடு போடும் அளவுக்கு நமது நாடு செல்வ வளம் மிக்க நாடு கிடையாது. பொருளாதாரத்தில் வளரும் நாடு என்ற அந்தஸ்தில் உள்ள நாடு என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, அரசு செய்யும் என்று எதிர்பார்க்காமல், மக்கள் ஒவ்வொருவரும் வைரஸ் பரவலுடன் சேர்ந்து நல்லபடியாக வாழ கற்றுக் கொள்ளவேண்டியது அவசியம்.
குடை முக்கியம் பிகிலே
அதில் ஒரு முக்கியமான விஷயம் குடை பிடித்தல் என்பது. எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும், அது வெயில் காலம், மழைக் காலம், குளிர் காலம் என எதுவாக இருந்தாலும், குடையை கையில் பிடித்தபடி செல்லுங்கள். இதன் மூலம் இயல்பாகவே இரண்டு நபர்கள் இடையே குறைந்தபட்சம் இரண்டடி இடைவெளி கிடைக்கும். ஆந்திர மாநிலத்தில் குண்டூர் என்ற மாவட்டத்தில் இப்படித்தான் குடைப்பிடித்து வருவோருக்கு மதுபான கடைகளில் மது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
செல்போனில் கவனம்
மற்றொரு தடுப்பு நடவடிக்கை என்றால், வெளியில் செல்லும்போது செல்போன் பயன்பாட்டை தவிர்த்தல்தான். ஏனெனில் வெளியே ஏதாவது ஒரு பொருளை தொட்டுவிட்டு, நாம் வீட்டுக்கு வரும் முன்பாக சனிடைசர் அல்லது சோப்பு போட்டு கைகளை கழுவி விடுவோம். ஆனால், செல்போன்களை கழுவ முடியாது. எனவே வெளியே எதையாவது நாம் தொட்டுவிட்டு, அதை செல்போனில் தொட்டால், ஒருவேளை வைரஸ் வெளியிடத்தில் இருந்தால், செல்போனிலும், கொரோனா அப்படியே இருக்கும். செல்போனை தொட்டுவிட்டு உணவு சாப்பிடுவோம், அல்லது வீட்டில் உள்ள மற்றொரு தொடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே செல்போனை பயன்படுத்திதான் ஆக வேண்டும் என்ற நிலை வந்தால், பயன்படுத்துவதற்கு முன்பாக கையில் சானிட்டைசர் போட்டு கழுவுங்கள், பிறகு செல்போனை பயன்படுத்தி விட்டு, மறுபடியும் சானிடைசர் போட்டு கையை கழுவி விடுங்க. மிக மிக அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே தவிர வேறு எதற்காகவும் வெளியில் செல்லும் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
மூன்று விஷயங்கள்
முகத்தில் எப்போதும் மாஸ்க் அணிந்திருப்பதை பழக்கப்படுத்துங்கள். இதில் ஜப்பான் முன்னோடி நாடாகும். அவர்களை போலவே நமது வாழ்க்கையிலும், மாஸ்க் அணிவது கட்டாயமாக வேண்டும். இப்போதெல்லாம் உடைகளுக்கு மேட்சிங்காக மாஸ்க் வர ஆரம்பித்துவிட்டது. ஆண்களும், பெண்களும், இப்படி மேட்சிங் மாஸ்க் அணியலாம். எப்படி டை கட்டுவது மதிப்புக்குரியதாக பார்க்கப்படுகிறதோ, அப்படித்தான் மாஸ்க் அணிவதும் மிகவும் மரியாதைக்குரியது என்பதை மனதில் ஏற்றுங்கள். கையில் எப்போதும் சானிட்டைசர் மற்றும் குடை வைத்திருத்தல், செல்போன் பயன்பாட்டை தவிர்த்தல், மாஸ்க் அணிதல், ஆகிய இந்த மூன்றும், கொரோனா வைரசுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கான உற்ற உபாயமாகும்.