குடை கொண்டு போங்க! சென்னையில் பகலில் கொட்டும் மழை.. மேலும் 8 மாவட்டங்களுக்கும் வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று பகல் 12 மணிக்குள் சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், வேப்பேரி, அண்ணா சாலை, மெரினா, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், தேனாம்பேட்டை, நந்தனம், மாம்பலம், பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேலும், ஈரோடு, சேலம், தருமபுரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பகல் 12 மணிக்குள் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடதமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 96.8-98.6 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும். வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications