பரபரப்பாகும் பரந்தூர் விமான நிலைய பணிகள்..நில எடுப்பு பணிகளை தொடங்கிய டிட்கோ! அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நில எடுப்பு பணிகளை டிட்கோ தொடங்கியுள்ளது. நில எடுப்பு தொடர்பாக ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது பணிகளைத் தொடங்கியிருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது .அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தினையும், திருப்பெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தினை கையகப்படுத்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. முன்னதாக டிட்கோ பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை உருவாக்கியது. இதன் சுமார் 32 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலவில், நான்கு கட்டங்களாக இந்த விமான நிலையம் உருவாக்கப்படும் எனவும், 100 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் மூன்று டெர்மினல்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டது.
மேலும் புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் ஏகானபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு சார்பில் அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து டிட்கோ நிறுவனம் 2023ல் பரந்தூர் விமான நிலையத்திற்கு தள அனுமதிக்கான விண்ணப்பத்தை அனுப்பியது. மேலும், தள அனுமதி தவிர, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்ட அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவற்றிற்கும் விண்ணப்பித்தது. டிசம்பர் 2023 இல், பாதுகாப்பு அமைச்சகத்தால் தள அனுமதிக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தல அனுமதி கோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு டிட்கோ விண்ணப்பித்தது.
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறை, ராணுவம் மற்றும் விமானப்படை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பரந்தூரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது பரந்தூர் விமான நிலைய அமைவிடத்திற்கு அனுமதி வழங்கி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இதனையடுத்து பரந்தூர், ஏகணாபுரம் தவிர்த்து பிற இடங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் நில எடுப்பு பணிகளை டிட்கோ தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக அதிகாரிகள் தற்போது நிலம் எடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்நிலம் எடுப்பு தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தை அணுகலாம் எனவும் இது தொடர்பாக செப்டம்பர் மாதம் 17 முதல் 19ஆம் தேதிவரை முடிவெடுக்கப்படும் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஆறு, காஞ்சிபுரம் வட்டத்தில் ஏழு கிராமங்களில் சுமார் 4500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் ஏற்கனவே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications