டிக்டாக்கிற்கு தடை.. இனி குடும்ப பெண்களின் குத்தாட்டம் இருக்காது.. சண்டைகளுக்கும் முற்றுப்புள்ளி
சென்னை: டிக்டாக்கிற்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளதை அடுத்து இனி குடும்ப பெண்களின் குத்தாட்டம் இருக்காது. அது போல் சண்டைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பிற்கு பட்டாசு வெடிக்காத குறையாக பெரும்பாலானோர் வரவேற்றுள்ளார்கள்.
Recommended Video
டிக்டாக் என்ற ஒரு செயலி இல்லாத செல்போன்களே இல்லை எனலாம். குக்கிராமம் வரை இந்த செயலி நன்றாக ரீச்சானது. நரிக்குறவர்களும் இந்த ஆப் மூலம் பல வீடியோக்களை செய்துள்ளனர்.
பெரும்பாலான மக்களும் இந்த செயலியில் பங்களிக்காவிட்டாலும் டிவி பார்ப்பதை விட அடுத்தவர்கள் வெளியிடும் இந்த வீடியோக்களை பார்த்து பொழுதை போக்கி வந்தனர்.

அத்துமீறல்
இந்த நிலையில் சீனாவின் அத்துமீறலுக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக டிக்டாக் உள்பட 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இந்த முடிவை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த டிக்டாக் செயலிகள் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பலர் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றுள்ளார்கள்.

குத்தாட்டம்
முக்கியமாக இந்த செயலியை வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் பெண்களே அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். அவர்கள் தங்களது நடிப்பு, பாட்டு,நடனம் உள்ளிட்ட திறமைகளை வெளியுலகிற்கு காட்டினர். இதிலும் சிலர் ஆபாசமான பாடல்களுக்கு குத்தாட்டம் ஆடி பலர் ரசிக்கும்படியாக நடந்து கொண்டனர். இது போன்ற குத்தாட்டங்களுக்கு பலர் முகம் சுளிப்பதால் குடும்பத்தில் பிரச்சினைகளும் வெடித்தன.

வீடியோ
திறமைகளை வெளிப்படுத்துகிறேன் என்ற பெயரில் குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிட்ட பெண்கள் இன்று தான் செய்தது தவறு என உணர்ந்துள்ளனர். பலர் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என கூறிவிட்டு தங்கள் பணியை தொடர்ந்தனர். இந்த டிக்டாக்கில் ஒருவர் போட்ட வீடியோவுடன் டூயட் பாடும் பலர் அசிங்கமான செய்கைகளை காட்டி வீடியோ வெளியிட்டு வந்தனர்.

குடும்பம்
இந்த டிக்டாக் செயலியால் பலரது குடும்பம் சின்னாபின்னமாகிவிட்டது. பலர் குழந்தை, குடும்பத்தை விட்டு விட்டு டிக்டாக் பழக்கத்தால் ஏற்பட்ட நட்புகளுடன் சென்றுவிட்ட சம்பவங்களும் நடந்தது. மனைவி எப்போதும் டிக்டாக்கில் மூழ்கியதால் கொலை செய்துவிட்டதாக பல கணவன்மார்கள் வாக்குமூலம் கொடுத்துவிட்டு சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.

தடை
இப்படியாக பல குடும்பங்களில் புயலை கிளப்பிய இந்த டிக்டாக்கிற்கு தற்போது தடைவிதித்துள்ளதால் பலர் குடும்பங்களில் இனி வசந்தம் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்டாக்கை முழு நேரமாக செய்தவர்கள் கூட சீனாவுக்காக டிக்டாக்கை தடை செய்ததை வரவேற்கிறோம் என்றார்கள், இன்னும் சிலரோ டிக்டாக் போனால் எங்களால் வீடியோ போட முடியாதா என்கிறார்கள்.

பிளாட்பார்ம்
இரு போன்கள் இருந்தால் போதும் ஒன்று பாட்டு பாட வைக்க, இன்னொன்று நடனம் ஆட என்கிறார்கள். எது எப்படியோ எத்தனை தற்கொலைகள், எத்தனை கொலைகள், எத்தனை சமுதாய சீரழிவுகள்- இத்தனைக்கும் காரணமான டிக்டாக் செயலிக்கு தடை என்பது மிகச் சிறந்த முடிவே. அதே நேரத்தில் பலர் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த ஒரு நல்ல பிளாட்பார்மாக இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.












Click it and Unblock the Notifications