காமராஜருக்கு முன்பே.. பள்ளிகளில் உணவு திட்டம் தொடங்கப்பட்ட வரலாறு தெரியுமா.. “ரோல்மாடல்” தமிழ்நாடு
சென்னை: தமிழ்நாட்டில் ஏராளமான ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குழந்தைகள் கல்வி கற்று இன்று சமுதாயத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்க முக்கிய காரணமாக திகழ்ந்த மதிய உணவுத் திட்டம் தற்போது புதிய உருவம் பெற்று காலை சிற்றுண்டி திட்டமாக விரிவடைந்துள்ளது.
இந்தியாவில் இந்த சாதியினர்தான் படிக்க வேண்டும், இந்த சாதியினர் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று மேலோங்கி இருந்த சாதிய ஒடுக்குமுறையை தகர்க்க உருவானது நீதிக்கட்சி. அன்று மதராஸ் மாகாணத்தில் ஆட்சியை பிடித்து உயர்சாதியினரின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியது.
கல்விக்கே சாதிய படிநிலைகளை தகர்த்து எரியும் சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய சிறுவர்களுக்கு கல்வி வழங்க முடிவு செய்தது அன்றைய நீதிக்கட்சி அரசு. ஆனால், காலம் காலமாக இருந்த சாதி ஒடுக்குமுறைகளால் வறுமையில் வாடி கூலித்தொழில் செய்து வந்த மக்கள் தங்கள் பிள்ளைகளையும் வேலைக்காக அனுப்பி வந்தனர்.
"ஹீரோ" ஸ்டாலின்.. அதே பாசம்.. அதே அன்பு.. தமிழகத்தையே நெகிழ வைத்த ஒற்றை போட்டோ.. சபாஷ் முதல்வர்
சர்.பிட்டி தியாகராயர் - உணவு திட்டம்
முறையான உணவு கூட இல்லாத அவர்களின் வலியை உணர்ந்த நீதிக்கட்சியின் ஆட்சியாளர் சர்.பிட்டி தியாகராயர் மதிய உணவு திட்டத்தை தொடங்க முடிவு செய்தார். சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பள்ளியில் கடந்த 1920 ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி இந்த திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டது. இதற்கு கிடைத்த வெற்றியால் அடுத்து 4 பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள், இந்த உணவுக்காகவே பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். இப்படி அந்த ஏழை குழந்தைகளுக்கும் கல்வி கிடைத்தது.
காமராஜர் - மதிய உணவு திட்டம்
இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டாலும் நிதிபற்றாக்குறையால் அது எளிதில் நிறைவேறவில்லை. இந்த உணவுத் திட்டத்தின் பலன்களை உணர்ந்த காமராஜர், தமிழ்நாடு முழுவதும் மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். 1955 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்கள் மாநாட்டில் பங்கேற்ற அப்போதைய முதலமைச்சர் காமராஜர், இது தொடர்பாக முதன்முதலில் ஆலோசித்தார். அதன் தொடர்ச்சியாக பாரதியார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இந்த திட்டம் முதன் முதலில் தொடங்கப்பட்டது.
எம்ஜிஆர் - சத்துணவு திட்டம்
காமராஜர் தொடங்கி வைத்த இந்த திட்டத்தால் மாநிலம் முழுவதும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்க தொடங்கினார்கள். இதனை மேலும் தரம் உயர்த்தியவர் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர். திருச்சி பாப்பாக்குறிச்சியில் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக தரம் உயர்த்தினார் எம்.ஜி.ஆர். இதற்காகவே தனி அமைச்சரவையையும் கொண்டு வந்தார். இந்த திட்டத்தால் உழைக்கும் ஏழை பெண்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் நம்பி விட்டுச்சென்றனர்.
கருணாநிதி - முட்டை
பசி தீர்க்கும் சாதாரண உணவாக இல்லாமல் ஊட்டச்சத்துடன் ஏழை மாணவர்கள் இருக்க இந்த சத்துணவு திட்டத்தில் முட்டைகளை வழங்க முடிவு செய்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 1989 ல் 2 வாரத்துக்கு ஒரு முட்டை என்ற திட்டத்தை கொண்டு வந்த கருணாநிதி, 1998 ஆம் ஆண்டு வாரம் ஒரு முட்டை, 2006 ஆம் ஆண்டு வாரம் 2 முட்டை, 2007 ஆம் ஆண்டு வாரம் 3 முட்டை என அதிகரித்து 2008 ஆம் ஆண்டு மாணவர்கள் பள்ளிக்கு வரும் 5 நாட்களும் முட்டை வழங்க உத்தரவிட்டார். முட்டை சாப்பிட விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கினார்.
ஜெயலலிதா - கலவை சோறு
இதனை மேலும் மாற்றிவர் ஜெயலலிதா. பள்ளி மாணவர்கள் ருசியான உணவை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் கலவை சோறு திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் மாணவ மாணவிகள் தினசரி விதவிதமான கலவை கொண்ட உணவுகளை சாப்பிட்டனர். அதேபோல் முட்டை உணவும் வெவ்வேறு வகையாக மாற்றம் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது சமச்சீர் உணவு திட்டத்தை கொண்டு வர தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் முயற்சி செய்தார். ஆனால் அது முழுமைபெறவில்லை.
ஸ்டாலின் - காலை சிற்றுண்டி
இந்த நிலையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று அறிமுகம் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி சட்டமன்றத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டபோதே இதற்கு வரவேற்பு அதிகரித்தது. காலையிலேயே கூலித் தொழிலுக்கு செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இந்த சிற்றுண்டி திட்டம் பெரும் வாய்ப்பாக அமையும் என்றே கூறப்படுகிறது,