டாஸ்மாக்கில் மது வாங்க.. வயது வாரியாக டைம் டேபிள்.. இளைஞர்களுக்கு ஈவ்னிங்.. முதியோருக்கு மார்னிங்.!
சென்னை: நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் 45 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடியே இருந்தன. இந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் கடைகள், தொழில்கள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
அது போல் டாஸ்மாக் கடைகளும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன் தினம் டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, சண்டீகர் உள்ளிட்ட மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைகள்
அது போல் தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் வரும் 7ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன் அரசாணையில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே கடைகள் இயக்கப்பட வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் போடப்பட்டன.

சமூக ஆர்வலர்கள்
குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படும் என திருப்பூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கோயம்பேடு காய்கறி சந்தையில் கூட்டம் கூடியதை போல் டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் கூடினால் அடுத்தது கொரோனா பரப்பும் இடமாக டாஸ்மாக் கடைகள் மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். எனினும் சென்னை காவல் எல்லை நீங்கலாக நாளை முதல் தமிழகத்தில் மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன.

போலீஸார்
45 நாட்களுக்கு பிறகு நாளை கடை திறக்கப்படவுள்ள நிலையில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நாளை ஒவ்வொரு டாஸ்மாக் முன்பும் 2 போலீசார் நிற்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவர்.

டைம்டேபிள்
மேலும் மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த வயதினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில்தான் மது வாங்க வர வேண்டும். அதன்படி 50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மதுபானங்களை வாங்கலாம். அது போல் 40-50 வயதிற்குள் உள்ளவர்கள் பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் 40- வயதிற்குள்ளவர்கள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் மது வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

அவதி
அதாவது முதியவர்களுக்கு காலையிலும், இளசுகளுக்கு மாலையிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்னி வெயில் கொளுத்தும் வேளையில் நேரம் ஒதுக்கியுள்ளதற்கு முதியவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வயதிற்கும் தோற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் மதுப்பிரியரின் வயதை எப்படி சரி பார்த்து அனுமதிப்பார்கள் என்பது தெரியவில்லை. ஒரு வேளை ஆதார் எண் உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளை சரிபார்த்து அவர்களுக்கு மது வழங்கப்படுமா என்பதும் தெரியவில்லை. அது குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications