சென்னை டூ கோட்டயம்.. சபரிமலை சிறப்பு ரயிலின் நேரம் மாற்றம்! தெற்கு ரயில்வே கொடுத்த முக்கிய அப்டேட்
சென்னை: சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சென்னையிலிருந்து போத்தனூர் வழியாக கேரளாவின் கோட்டயத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த ரயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. எனவே ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கவும் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து பக்தர்கள் எளிதாக சென்றுவர தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கிறது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.26, டிச.3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06027) புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயத்தை அடையும் என்றும், கோட்டயத்தில் இருந்து நவ.27, டிச.4, 11, 18, 25, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) இரவு 7 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06028) புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும் என்றும் தெற்கு ரயில்வே கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த சிறப்பு ரயிலின் பயண நேரம் மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது, கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து 7 மணிக்கு புறப்படும் சென்னை சிறப்பு ரயில், இரவு 7 மணிக்கு பதில் இரவு 8.45க்கு கோட்டயத்திலிருந்து புறப்படும். அதேபோல இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கோட்டயம் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சபரிமலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருக்கிறது. ஏற்கெனவே பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் பக்தர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக பம்பை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications