தொட்டதெல்லாம் துலங்கும் தைப்பூசம் திருநாள்.. தமிழகத்தின் முருகன் கோயில்களில் கூடிய பக்தர்கள்: அரோகரா
சென்னை: இன்று தைப்பூச திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதுமுள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், தமிழகத்தின் முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
தை மாதத்தில் பௌர்ணமி திதியும், பூச நட்சத்திரமும் வரும் நாளே, தைப்பூசம் ஆகும். இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்கள் உள்பட பெரும்பாலான கோயில்களில் தைப்பூச கொண்டாட்டம் ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கிவிட்டது..

பக்தர்கள் கூட்டம்: இன்று தைப்பூசம் என்பதால், கடந்த ஒரு வாரமாகவே பக்தர்கள் கூட்டம் முருகன் கோயில்களில் வழக்கத்துக்கு அதிகமாகவே காணப்பட்டது. தைப்பூசத்திற்கு அதிகளவு பக்தர்கள் வருவதை முன்னிட்டு, அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளுக்கு அதிகளவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தைப்பூசம் என்றாலே அனைத்து முருகன் கோயில்களை காட்டிலும், பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். பழனியில் நேற்று முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அதனால், பழனிக்கு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து வழக்கத்தை விட கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேர்த்திக்கடன்: மற்றொருபுறம், தைப்பூசத்திற்காக மாலை அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர். இன்றும் விடிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோத துவங்கிவிட்டது.
தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், முருகன் கோயில்களை நோக்கி பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.. பால்குடம், காவடி எடுத்து திரளாக கோயிலுக்கு பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.,..
பக்தர்களின் வசதிகளுக்காக கோயில்களில் சிறப்பு வரிசைகளும், சிறப்பு தரிசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.. அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வடபழனி: சென்னையிலும் வடபழனி முருகன் கோயிலில் இன்று அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பிறகு, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து , மதியம் 1 மணி முதல் மாலை 4.30 மணி வரை பாலால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது.
திருச்செந்தூரில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது.. அதிகளவில் பக்தர்கள் திருச்செந்தரில் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.. குறிப்பாக ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடியிலிருந்து பக்தர்கள் அதிகமாக வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications